நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு
நாகை ஏப் 26
நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மூலதன மான்ய நிதி மற்றும் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் காடம்பாடி ராஜா நகரில் மூலதன மான்ய நிதி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் 1.925 கி.மீ நீளத்திற்கு ரூ.6 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும், பப்ளிக் ஆபிஸ் ரோடு முதல் அந்தோணியார் பள்ளி வரை 2.225 கி.மீ நீளத்திற்கு ரூ.6 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், நாகப்பட்டினம் நகராட்சியில் ரூ.3 கோடி 25 இலட்சம் மதிப்பீட்டில் நடைபாதை மற்றும் சாலை தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், புதிய பேருந்து நிலையத்தை ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணிகள் நடைபெறுவதையும், அக்கரைகுளம் செல்லும் சாலையில் ரூ.5 கோடி 30 இலட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் ஆய்வு செய்தார்.
மேலும், நாகப்பட்டினம் நகராட்சி கூக்ஸ் ரோடு பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டுமான பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
இவ்வாய்வில் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகராட்சி பொறியாளர் ஜெயகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், நகராட்சி உதவி பொறியாளர் அருண்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
வேதாரண்யம்

