சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
நாகை மார்ச் 24
நாகப்பட்டினம் மாவட்டம் தனியார் கல்லூரியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது. காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பேசியதாவது :
இந்தியாவில் சுமார் 30-கோடி வாகனங்கள் பதிவு செய்து இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் போக்குவரத்துதுறை மூலம் சுமார் 2.5 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் சுமார் 7 இலட்சம் போக்குவரத்து வாகனங்களான ஆட்டோரிக்சா, சுற்றுலா சீருந்து, மேக்சிகேப், கல்வி நிறுவன வாகனங்கள், பேருந்துகள், ஆம்னிபேருந்துகள், இலகுரக மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் போன்றவை பயன்பாட்டில் இருந்துவருகிறது.
தமிழ்நாட்டில் வாகனஎண்ணிக்கையின் அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் சாலை விரிவாக்கத்தினை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செய்தும், சாலையை பயன்படுத்தக் கூடிய பாதசாரிகள், வாகன ஓட்டிகள், கனரக பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்களின் கவனக்குறைவால் சாலை விபத்துகள் தொடர்ந்துஅதிகரித்து வருகிறது.
விபத்தின் முக்கியகாரணம் இரு சக்கர வாகனத்தில் செல்லுபவர்கள் தலை கவசம் அணியாதது, செல்போன் பேசி வாகனம் இயக்குவது, சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனத்தை இயக்குவது, 18 வயதிற்கு குறைவான மாணவர்கள் வாகனங்களை இயக்குவது, இலகுரக வாகனத்தின் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்குவது, லாரி, பேருந்துகள் அதிவேகம் செல்வது
குறிப்பாக இரவு நேரங்களில் கண் கூசும் முகப்பு விளக்குகளை பயன்படுத்துவது, மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்குவது, அனைத்து வகையான வாகன ஓட்டிகளும் முறையான பயிற்சி, உரிமம் இல்லாதது மற்றும் சாலை விதிகளை பின்பற்றாதது போன்ற காரணங்களால் வாகன விபத்துகள் அதிகமாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் அதிக விபத்தினை சந்தித்து வருவதால் கடந்த 3 ஆண்டு காலமாக மோட்டார் வாகன விதிகளை அமல்படுத்திட நீதிமன்ற உத்தரவு, காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை மூலம் செயலாக்க பணிகள் மற்றும் போக்குவரத்து சாலை பாதுகாப்பு மேலாண்மை துறை மூலம் சாலை பாதுகாப்பு கருத்தரங்கம், சாலை பாதுகாப்பு விழா நடத்தப்பட்டு மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைப்பதன் பலனாக கடந்த 2 ஆண்டுகளாக சாலை விபத்து குறைந்து மத்திய அரசின் மூலம் தமிழ்நாட்டிற்கு தேசிய விருது கிடைக்கப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சுமார் 30 – 40 உயிரிழப்புகள் ஏற்பட்டு 1 மணி நேரத்திற்கு 1 நபராவது உயிரிழந்து வருகின்றனர். இந்த விபத்துகளில் 60 சதவீதத்தினர் 18 முதல் 25 வயதுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆவார்.
இது போன்ற உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்னுயிர் காப்போம் திட்டத்தினை செயல்படுத்தி அதன் மூலம் பெரிய உயிரிழப்பு விகிதத்தினை குறைத்துள்ளார்கள். கடந்த ஓர் ஆண்டு மட்டும் சுமார் 35 இலட்சம் விபத்தின் மூலம் ஏற்பட்ட காயம், உயிரிழப்பிற்கு பெரும் உதவியினை செய்து வருகிறார்கள்.
நம் மாவட்டத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு 92 உயிரிழப்புகள் நடந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் எடுத்த முயற்சியால் 82 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி கல்வித்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உணர்த்தும் வகையில் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி, இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி குழும செயல் அலுவலர் முனைவர் எஸ்.சந்திரசேகர், மோட்டார் வாகன ஆய்வாளாகள் பிரபு, நல்லத்தம்பி, செயலாக்க பிரிவு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

