குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தொடங்கி வைப்பு
வேதாரண்யம் மார்ச் 15
நாகப்பட்டினம் மாவட்டம் தேசிய குடற்புழு நீக்க வாரத்தினை முன்னிட்டு நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்து குடற்புழு நீக்க மாத்திரையை வழங்கினார்.
தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, இணை இயக்குநர் சுகாதாரபணிகள் மரு.விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை சார்பில் நாடு தழுவிய குடற்புழு நீக்கவாரம் மார்ச் மாதம் நடைபெறுவதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் 14.03.2022 முதல் 21.03.2022 வரை நடைபெறுகிறது. 14.03.2022 முதல் 19.03.2022 வரை முதல் சுற்றும், விடுபட்ட குழந்தைகளுக்கு 21.03.2022 அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது.
அசுத்தமான கைகள், சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளுதல் மற்றும் தோலின் வழியாக புழுக்கள் உடலினுள் உட்செல்லுகிறது. இதனால் புழுத்தொற்று ஏற்பட்டு ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் சுகவீனம்,பசியின்மை, இரத்தசோகை, குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.


குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதால் இரத்த சோகை தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
1-2 வயதுடையவர்களுக்கு அல்பெண்டாசோல் பாதி மாத்திரை (200அப), 2-19 வயதுடைய அனைத்து குழந்தைகள் மற்றும் 20-30 வயதுடைய மகளிருக்கு 1 அல்பெண்டாசோல் மாத்திரை (400அப) வழங்கப்படுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமில் 01-19 வயதுடைய 1,97,751 குழந்தைகளுக்கும் , 20-30 வயதுடைய 49,622 மகளிருக்கும் மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முகாம் நடைபெறும் இடங்களில் கோவிட்-19 தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அங்கன்வாடிமையங்கள், பள்ளி, கல்லூரி மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 01-19 வயது குழந்தைகள் மற்றும் 20-30 வயது மகளிருக்கு வழங்கப்பட உள்ளது. அனைத்து மாணவர்களும் மாத்திரையினை உட்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், மருத்துவர்கள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

