சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மற்றும் பஸ், ஆட்டோக்களில் சைபர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மாவட்டத்தில் இணைய வழி குற்றங்களை தடுக்கும் வகையில், அதாவது Smart Phone பயன்படுத்தும் போது முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் சாதாரண அழைப்புகள், வீடியோ அழைப்புகள், மேட்ரிமோனி தொடர்பான அழைப்புகள், பேஸ்புக் மெசஞ்சர் உரையாடல்கள், லோன் ஆப் தொடர்பான குற்றங்கள்,போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள், இணையதள வர்த்தக நிறுவனங்களின் பெயரில் போலி விளம்பரங்கள், பிட்காயின் வர்த்தகம் தொடர்பான போலி விளம்பரங்கள், போலி இன்ஸ்யூரன்ஸ் நிறுவன விளம்பரங்கள், நைஜீரிய குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்டு வரும் நவீன இணையதள மோசடிகள்,தொடர்பாக பொதுமக்கள் இணையதள குற்றவாளிகளின் நயமான பேச்சுக்களை நம்பி அவர்கள் கூறும் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தி ஏமாந்து விடுகின்றனர்.
சமீப காலமாக நடைபெற்று வரும் இணையதள குற்றங்களை பட்டியலிட்டு ஆராயும் போது அத்தகைய குற்றங்களில் பெரும்பாலும் சாதாரண உழைக்கும் மக்களையும், அவசர கதியில் இயங்கும் மக்களையும் குறிவைத்து நடத்தப்படுவதாக தெரியவருகிறது.
இதனை கருத்தில் கொண்டு இணைய தள குற்றங்களின் மூலம் தங்கள் பணத்தை இழந்து விடாமல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுமக்கள் கூடும் இடங்களான நியாய விலைக்கடைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள். வங்கிகள், ATM மையங்கள், தபால் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் (Super Markets) மற்றும் பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டி இணையதள குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரிநாராயணன் I.P.S இணையதள விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் அவர் கூறியதாவது, சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ATM மையங்கள்,வங்கிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தபால் அலுவலகங்கள், நியாயவிலைக் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் (Super market) மற்றும் நகர்ப்புற பேருந்துகளில் இத்தகைய ஸ்டிக்கர்கள் ஒட்டி அந்தப் பகுதி காவல் நிலையம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், சைபர் குற்றங்கள் இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டத்தை மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

