சென்னையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று , அவர்களுக்கு மன ரீதியாகவும் , உளவியல் ரீதியாகவும் , சட்டரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிட சென்னை பெருநகர காவல் துறையில் தோழி திட்டம் செயல்பட்டுவருகிறது .

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் இன்று காலை காவல் ஆணையாளர் அலுவலகம் , இரண்டாம் தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் , பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவிடும் தோழி திட்டம் மகளிர் காவலர்களுக்கு ஒரு நாள் புத்துணர்வு பயிற்சி முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் . மேலும் தோழி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக்காவலர் வள்ளியம்மை த.கா .32253 மைலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக்காவலர் . புனிதா த.கா .19270 வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக்காவலர் வனிதா த.கா .25108 அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக்காவலர் வளர்மதி த.கா .36688 ஆகியோருக்கு காவல் ஆணையாளர் தோழி விருது வழங்கி கௌரவித்தார்.

