திறந்தவெளி நெல்கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் – நாகை விவசாயிகள் கோரிக்கை .
வேதாரணியம்
மார்ச் 01
நாகை மாவட்டத்தில் பலஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல் அரசின் 156 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நிரந்தரமான நெல் கொள்முதல் நிலையங்களை தவிர இந்த ஆண்டுவரை துவங்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் திறந்தவெளி பகுதிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் சுமார் 3 ஆயிரம் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை வங்கக்கடலில் உருவாகியுள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திறந்த வெளி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் அதிக மழை பெய்தால் நனைந்து சேதமாகும் நிலை ஏற்படும். ஆகவே உடனடியாக நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் அல்லது திறந்தவெளியில் அடுக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளை தரமான தார்ப்பாய்களை கொண்டு மூடி பாதுகாக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

