நாகை மாவட்டத்தில் 445 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் – நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல்
வேதாரண்யம் பிப் 27
நாகப்பட்டினம் அடுத்த காடம்பாடி நடுநிலைப் பள்ளியில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தீவிர பல்ஸ் போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் இன்று (27ஆம் தேதி) தொடங்கிவைத்தார். தமிழ்நாடு தாட்கோ கழகத் தலைவர் மதிவாணன் உடனிருந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிராமபுறங்களில் 390-ம் நகர்புறங்களில் 55-ம் ஆக மொத்தம் 445 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் நகர்புறங்களில் 12,424 குழந்தைகளுக்கும் மற்றும் கிராமபுறங்களில் 48,429 குழந்தைகளுக்கும், மொத்தம் 60,853 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க பட உள்ளது.


போலியோ சொட்டு மருந்து வழங்கும் ஒவ்வொரு மையத்திலும் 4 களப்பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முறையே பதிவுசெய்தல், சொட்டுமருந்துவழங்குதல், இடது கை சுண்டுவிரலில் அடையாள மையிடுதல், குழந்தைகளை முகாமிற்கு அழைத்து வருதல் முதலிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்பணியில் பொதுசுகாதாரத்துறை தவிர உள்ளாட்சித்துறை, சமூகநலத்துறை, ஊட்டச்சத்து பணியாளர்கள், பயிற்சிசெவிலியர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் என 1,895 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக போலியோ நோய் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடிக்க தங்களது குடும்பத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இந்த போலியோ சொட்டு மருந்தை தவறாமல் கொடுத்து பொதுமக்கள் ஒத்துழைப்பை நல்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும், மாவட்டம் முழுவதும் போக்குவரத்து வசதி இல்லாத உட்கிராமங்களுக்கு 06 நடமாடும் வாகனங்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன. நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் நகராட்சி பேருந்து நிலையங்களிலும், நாகப்பட்டினம் புகைவண்டி நிலையத்திலும் 24 மணி நேரமும் இன்றிலிருந்து 01.03.2022 வரை 3 நாட்களிலும் இலவசமாக போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுதலங்கள், சுற்றுலாதலங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், தற்காலிகமாக தெரு ஓரங்களில் வசிக்கும் நாடோடிகள், பொம்மை செய்பவர்கள், கட்டிட வேலை மற்றும் செங்கல் சூளைகளில் பணிபுரிபவர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரின் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு 28.02.2022 திங்கள் மற்றும் 01.03.2022 செவ்வாய் கிழமைகளில் களப்பணியாளர்கள் மூலம் வீடுவீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் வேதாரண்யம் நகராட்சியில் 17 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ரோட்டரி சங்க தலைவர் புயல்குமார் தலைமையில் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டு உதவினர்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.விஜயகுமார், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
.நாகை மாவட்ட செய்தியாளர்
வேதாரண்யம்.

