நாகை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்
வேதாரண்யம் பிப் 25
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிறந்தது முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும் 27.02.2022 அன்று நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் நடைபெறஉள்ளது.
நாகை மாவட்டத்தில் கிராமபுறங்களில் 390-ம் நகர்புறங்களில் 55-ம் ஆக மொத்தம் 445 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து முகாம் 27.02.2022 அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நகர்புறங்களில் 12,424-ம் மற்றும் கிராமபுறங்களில் 48,429-ம் மொத்தம் 60,853 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
போலியோ சொட்டு மருந்து வழங்கும், ஒவ்வொரு மையத்திலும் 4 களப்பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படஉள்ளனர். இவர்கள் முறையே பதிவு செய்தல், சொட்டு மருந்து வழங்குதல், இடது கை சுண்டுவிரலில் அடையாள மையிடுதல், குழந்தைகளை முகாமிற்குஅழைத்து வருதல் முதலிய பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.
இப்பணியில் பொதுசுகாதாரத்துறை தவிர உள்ளாட்சித்துறை, சமூகநலத்துறை, ஊட்டச்சத்து பணியாளர்கள், பயிற்சி செவிலியர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் என 1,895 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக போலியோ நோய் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடிக்க தங்களது குடும்பத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இந்த போலியோ சொட்டு மருந்தை தவறாமல் கொடுத்து தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
மேலும், மாவட்டம் முழுவதும் போக்குவரத்து வசதி இல்லாத உட்கிராமங்களுக்கு 06 நடமாடும் வாகனங்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும், நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் நகராட்சி பேருந்து நிலையங்களிலும், நாகப்பட்டினம் புகைவண்டி நிலையத்திலும் 24 மணி நேரமும் 27.02.2022, 28.02.2022 மற்றும் 01.03.2022 ஆகிய 3 நாட்களிலும் இலவசமாக போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
அனைத்து வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், தற்காலிகமாக தெரு ஓரங்களில் வசிக்கும் நாடோடிகள், பொம்மை செய்பவர்கள், கட்டிட வேலை மற்றும் செங்கல் சூளைகளில் பணிபுரிபவர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரின் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு மறுநாள் 28.02.2022 திங்கள் மற்றும் 01.03.2022 செவ்வாய் கிழமைகளில் களப்பணியாளர்கள் மூலம் வீடுவீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 87548 37597 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

