வேதாரண்யம் நகராட்சி தேர்தலில் தில்லு முல்லா?
புகைப்படம் எடுக்க விடாமல் பத்திரிகையாளர்கள் வெளியேற்றும் மர்மம் என்ன?
வேதாரணியம்
பிப் 05
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுஅந்தந்த நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த உள்ளாட்சி தேர்தலில் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள்? இன்று எந்த கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்? தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்? என்று பொதுமக்கள் அறியும் வண்ணம் தேர்தல் செய்திகளை வெளியிடுவதில் பத்திரிக்கையின் பணி அளப்பறியது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை துறையை பணி செய்ய விடாமல் தடுப்பதன் மூலம் நாட்டின் ஜனநாயகத்தின் குரல் வலை நசுக்கப்படுகிறது என்கின்றனர் நாகை மாவட்ட பத்திரிகையாளர்கள்.
ராணுவ வீரரின் கையில் உள்ள துப்பாக்கி நாட்டை பாதுகாக்கும், கயவர்களின் கையில் கிடைத்த துப்பாக்கி நாட்டை சீர்குலைக்கும்.அதுபோல் அதிகாரம் நல்ல அதிகாரிகள் கையில் கிடைத்தால் நாடு வளர்ச்சி பாதையில் பயணிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மாறாக தவறான நபர்களிடம் கிடைக்கும் அதிகாரம் நாட்டை சீரழித்து விடும் என்பதிலும் நமக்கு ஐயப்பாடில்லை.
வேதாரண்யம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவம் ஜனநாயகத்தையே கேலி கூத்தாக்கியுள்ளது.
வேதாரண்யம் நகராட்சி தேர்தலுக்காக அதன் நகராட்சி அலுவலகத்தில் வைத்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரியிடம் வேட்பாளர்கள் பலர் ஆர்வத்துடன் சமர்ப்பித்து வந்துள்ளனர். வேட்பாளர்கள் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் நேரில் சமர்ப்பிக்கும் போது அதை செய்தியாக உடனுக்குடன் வெளியிட பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுப்பது தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கு விதிவிலக்காக வேதாரண்யம் நகராட்சி, விதிகளை காற்றில் பறக்கவிட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதை புகைப்படம் எடுக்க கூடாது என்று வேதாரண்யம் நகராட்சி உதவி மேலாளர் ஜெயபிரகாஷ் பத்திரிகையாளர்கள் தடுத்த சம்பவம் தேர்தல் வரலாற்றில் ஒரு கருப்பு வரலாற்றை பதிவு செய்துள்ளது.
தேர்தல் வெளிப்படையாகவும், நடுநிலையாகவும் நடைபெறுகிறதா என்பதை பத்திரிக்கை வாயிலாகவே பொதுமக்கள் தெரிந்து கொள்கின்றனர் பத்திரிகையாளர்கள் எடுக்கும் புகைப்படம் மற்றும் விடியோக்களே உண்மைத் தன்மைக்கு சாட்சியாக உள்ளது.
வேதாரண்யம் நகராட்சி உதவி மேலாளர் ஜெயபிரகாஷ், பத்திகையாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, அவர்களிடம், நீங்கள் சின்ன பத்திரிகையாளர்கள் தானே என்றும், மேலும் அவதூறான வார்த்தைகளை பேசி அவமானப்படுத்தி, அலட்சியப்படுத்தியுள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டில் புதிதாக சிறு, குறு தொழில்களை உருவாக்கும் நோக்கில் எண்ணற்ற திட்டங்களை தீட்டி புதிய தொழில்களை உருவாக்க அரும்பாடுபட்டு வருகிறார். புதிதாக உருவாகும் நிறுவனங்களுக்கு பல்வேறு அரசு சலுகைளை அறிவித்து அவற்றிற்கு ஊக்கமளித்தும் வருகிறார். இந்நிலையில் புதிதாக உருவாகும் நிறுவனங்கள், பத்திரிகைகள் மீது அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வளர்த்தாலும், ஒரு சில அதிகாரிகளின் அலட்சியத்தால், சிறு தொழில்களும், சிறு பத்திரிகை நிறுவனமும் நலிவுற்று வருவதே அப்பட்டமான உண்மை என்று வேதனை தெரிவிக்கின்றனர் புதிதாக தொழில் துவங்க நினைப்போர்.
வேதாரண்யம் நகராட்சி உதவி மேலாளர் ஜெயபிரகாஷ் ஆணையரை விட தான் தான் பெரியவர் என்று காட்டிக் கொண்டு அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி வருவது வேதணையளிக்க கூடிய விசயமாகும்.
பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுப்பதை தடுப்பதன் மூலம் தேர்தலில் மோசடி மற்றும் தில்லுமுல்லு நடைபெற வாய்ப்பு அதிகம் இருப்பதாக அச்சம் தெரிவிக்கின்றனர் வாக்காளர்கள்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை துறையை பணி செய்ய விடாமல் தடுப்பதன் மூலம் காந்தி, காமராஜர், கக்கன் போன்றோர் பாதுகாத்து தந்த நாட்டின் ஜனநாயகம் நம் கண்முன்னே துடிதுடித்து சாவது நம் நெஞ்சை பதறச் செய்கிறது.
இந்த விஷயத்தில் நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஆகியோர் நேரடியாக தலையிட்டு வேதாரணியம் நகராட்சி உதவி மேலாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தோர் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஜனநாயகத்தின் நான்காவது தூண் உரிமை பாதுகாக்கப்படும் . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பத்திரிகையாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்புகளை உறுதி செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பத்திரிக்கையாளர்களின் விடிவெள்ளியாக தமிழக முதல்வரை விளங்கும்போது வேதாரணியம் நகராட்சியில் உதவி மேலாளராக இருக்கும் ஜெயபிரகாஷ் அதைவிட அதிகாரம் படைத்தவர் என பத்திரிகையாளர்கள் மத்தியில் கேள்வி எழுகிறது.
பத்திரிக்கையாளர்களிடம் இவர் இப்படி நடப்பதற்கு பின்னணி என்ன என்பது குறித்தும் புலன் விசாரணை மேற்கொண்டால் உண்மை வெளியே வரும். நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் சிறப்புகள் ஆகியவற்றை நகராட்சி ஆணையர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக இந்த பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் கேள்விகள் எழுந்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் நகராட்சிக்கு நுழைய கூடாது என இவர் சொல்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது.

சாதாரண பொதுமக்கள் கூட தங்கள் கோரிக்கைகள் அடிப்படை வசதி உரிமைகளைக் கேட்க நகராட்சிக்கு செல்ல அனுமதி இருக்கும் பட்சத்தில் செய்தியாளர்களை குறிவைத்து நகராட்சிக்குள் அனுமதிக்க இவர் மறுக்கும் சம்பவம் நேற்று மட்டுமல்ல நடந்து முடிந்த குடியரசு தின விழாவின் போது. வேதாரண்யம் நகராட்சியில் கொடியேற்று நிகழ்ச்சியை இவர் இருட்டடிப்பு செய்யும் வகையில் பல்வேறு பத்திரிகையாளர்களை புறக்கணித்து இருக்கிறார். இதன் உள்நோக்கம் என்ன என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும். பத்திரிகையாளர்களை பகைத்தால் பத்திரிகையாளர்கள் நேரடியாக அரசை வசை பாடுவார்கள் என நினைத்து ஒருசில அதிகாரிகள் செய்யும் பித்தலாட்டங்களை உளவுத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.
இந்த செயல் குறித்து தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்தி தொகுப்பு:
நமது சிறப்பு செய்தியாளர்.

