தாமிரத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால், அதன் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் சாதனங்களின் விலை உயரும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் சக்திகளின் பட்டியலில், இரும்பு, தாமிரம், துத்தநாகம், அலுமினியம் போன்ற உலோகங்கள் முக்கிய காரணிகளாக உள்ளன. இவற்றின் உற்பத்தி குறைந்தால், நாட்டின் பொருளாதாரத்திலும் உறுதியற்ற தன்மை ஏற்படுகிறது. இந்த உலோகங்களுக்காக, ஒவ்வொரு நாடும், மற்ற நாடுகளை நம்பியிருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
அரிய கனிம மணல்கள், மின் வாகனங்கள் தயாரிப்பதற்கும், பேட்டரி தயாரிப்பிற்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்களின் உற்பத்திக்கும், மின்சாதனம், கணினி, செய்தித் தொடர்பு மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கும் முதன்மையில் இருக்கின்றன. தொலைபேசி, கணினி, கார், காற்றாலை, குறைந்த மின்கடத்து திறனுள்ள சாதனங்கள் மற்றும் ஏவுகணை வழிகாட்டு சாதன உற்பத்திக்கு, அரிய கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.கனிம உற்பத்தியில் சீனா உலகச்சந்தையின் 70 சதவீதத்தை தன் கைவசம் வைத்துள்ளது. அரிய உலோக உற்பத்தியில் 97 சதவீதம் பங்காற்றுகிறது.
உலக நாடுகளில் உற்பத்தியாகும் அரிய வகை கனிமங்கள், சுத்திகரிப்புக்காக சீனாவுக்கு அனுப்பப்படுகின்றன. அரிய கனிமங்களை சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுப்பது எளிது. அவற்றில் இருந்து ஆக்சைடை பிரித்து எடுப்பது கடினம். அந்த செயல்பாடுகள் சுற்றுச்சூழலுக்கு சவாலானவை. சீனாவில் இந்த ஆக்ஸைட் பிரித்தெடுக்கும் தொழில் நுட்பம் சிறப்பாக உள்ளதால், சுரங்கத்தொழில், உலோகம், கலப்பு உலோகம் மற்றும் காந்தம் தயாரிப்பில் சீனா முதன்மையில் உள்ளது.
கடந்த, 1997ல் அமெரிக்காவின் கனிம வளங்களில் முன்னணி வகிக்கும் ‘மெக்னிக்வென்ச்’ என்ற நிறுவனம், இரண்டு சீன நிறுவனங்கள் அடங்கிய, ஒரு கூட்டு நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இதையடுத்து, மெக்னிக் வெஞ்ச் நிறுவனம் அமெரிக்காவில் மூடப்பட்டு, மீண்டும் 2003ல் சீனாவில் துவக்கப்பட்டது. சீனா தன் கைவசமுள்ள கனிமங்களின் விலையை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு குறைத்ததால், ‘மோலிகார்ப்’ என்ற அமெரிக்க நிறுவனமும் 2015ல் வீழ்ந்தது.
இப்படி, மற்ற எந்த நாடும் தன்னுடன் போட்டியிட முடியாத நிலையில், சீனா ஏகபோக நிலைக்கு வந்துள்ளது. பல வெளிநாட்டு நிறுவனங்களை சீனா விலைக்கு வாங்கியுள்ளது. கடந்த ஆண்டில், சீனா தங்களுக்கு சொந்தமான பெருவாரியான அரிய உலோகங்களை கொண்ட, மூன்று கனிம சுரங்க நிறுவனங்களை ஒன்றிணைத்துள்ளது. ஒரு நாட்டின் நடவடிக்கைக்கு இது உதாரணம்.
சீனாவின் கனிம ஏகாதிபத்தியத்தால், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அவருக்கு பின் வந்த அதிபர் ஜோ பைடன் ஆகியோர், நாட்டின் சுரங்கத் தொழில் பிரகடனத்தை வெளியிட்டு, உள்நாட்டு கனிம உற்பத்தியை ஊக்குவிக்கவும், ராணுவத்தொழில் நுட்பங்களுக்காக சீனாவை நம்பியிருப்பதை குறைத்து கொள்வதாகவும் அறிவித்தனர்.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் சீனாவின் இரண்டு மீன்பிடிபடகுகள், ஜப்பான் கடற்படை பாதுகாப்பு கப்பலின் மீது மோதியது. இதற்கு, சீன மீன்பிடி படகுகளின் தலைவரை ஜப்பான் அரசு விசாரித்தது. இதனால் கோபம் கொண்ட சீனா, ஜப்பானுக்கு அரிய கனிமங்களின் விற்பனைக்கு தடை விதித்தது. இதனால், அரிய கனிமங்கள் கிடைக்காமல் கார் உற்பத்தியில் ஜப்பான் பின்னடைவை சந்தித்தது.
இந்த காலகட்டத்தில், இந்தியாவின் உலோகங்கள் மற்றும் கனிமங்களின் நிலையை பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி, தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் முயற்சியை அறிவித்தார்.
ஐ.நா., சபையின் காலநிலை மாற்றம் குறித்த கூட்டம், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. ‘கிளாஸ்கோ’வில் நடந்த கூட்டத்தில் உலக தலைவர்கள் சுற்றுச்சுழலை பாதுகாக்க வேண்டி, ஒரு உறுதிமொழியை எடுத்தனர். இதன் காரணமாக மின்சார வாகனம், காற்றாலை மின்சாரம், சூரிய மின்சக்தி போன்றவற்றின் மீது அதிக முதலீடு செய்ய வழி ஏற்பட்டது.
இச்சாதனங்களின் உற்பத்திக்கு தாமிரத்தின் தேவை நான்கு முதல் ஆறு மடங்கு அதிகமாகியுள்ளது. இதில் சிக்கல் என்னவென்றால், ஒரு நாடு சுத்திகரிக்கப்பட்ட உலோகங்களையோ அல்லது தற்சார்புக்கு தேவையான பொருட்களையோ இறக்குமதி செய்தால், அந்த நாடு எப்படி தற்சார்பு நாடாக மாற முடியும்.
உதாரணமாக தாமிரம் மின்சாதன பொருட்கள் உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருள். ஆனால், இந்தியாவில் மிகப்பெரிய தாமிர தயாரிப்பு தொழிற்சாலை மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால், தாமிரம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்சார்பு என்பது நமக்கு கேள்விக்குறியாகி உள்ளது.
தாமிரத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால், அதன் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் சாதனங்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க முடியாமல், மீண்டும் நிலக்கரியால் செயல்படும் அனல் மின் உற்பத்திக்கு நாம் தள்ளப்படுவோம். இந்த இக்கட்டான சூழலில், மூடப்பட்ட தொழிற்சாலையை திறக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மிகவும் அரிதான கனிமங்கள் மற்றும் மதிப்புமிக்க மாற்று உலோகங்களை கையகப்படுத்தும் முயற்சியில், ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றன. இதுபோன்ற சவால்கள், நமக்கும் பின்வாசல் வழியாக வரும் என்பதை நாம் மறந்து விடுகிறோம். இதை நாம் கவனிக்காமல் விட்டதால், உலோக உற்பத்தியில் சில வெளிநாடுகள் இந்தியா மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றன.
ஒரு அன்னிய நாடானது, தன் இலக்கை அடைய ராணுவ அச்சுறுத்தல், புவி ஊடுருவல், அரசியல் நகர்வுகள் போன்ற அச்சுறுத்தும் கணைகளை தொடுக்கத் தேவையில்லை. சுற்றுச்சூழல் மாசு, சுகாதாரச் சீர்கேடு போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி குற்றமற்றவரை குற்றவாளியாக்கி, ஒரு நாட்டின் முன்னேற்றத்தை பின்னோக்கி செலுத்த முடியும்.
உதாரணமாக, நாட்டின் நலனுக்காக ஒரு தொழிற்சாலையை ஏற்படுத்துவதாக அரசு அறிவித்துவிட்டு, அதை செயல்படுத்தும்போதோ, செயல்படுத்திய பிறகோ, அந்த தொழிற்சாலைக்கு எதிராக சிலர் செயல்பட்டால், அதைச் சார்ந்த தொழில் இயக்கங்கள் கிளர்ச்சியில் ஈடுபடும். அந்த எதிர்ப்பிற்கு ஆதரவு தரும்முன், சம்பந்தப்பட்டவர்கள் தீர்க்கமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
உலக அளவில் பிரசித்தி பெற்ற உற்பத்தி நிறுவனங்கள் சிலவற்றின் போராட்ட நடவடிக்கைகளைப் பற்றி, ஊடகங்கள் தொடர்ந்து விவாதிக்கின்றன. அதை கவனித்தால் வெளிநாட்டு சக்திகள், அந்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதை அறிந்து கொள்ள முடியும்.
ஒரு புகழ்பெற்ற சீனப் பழமொழியை அடிப்படையாக கொண்ட ‘பதுங்கியிருக்கும் புலி; மறைக்கப்பட்ட பூதம்’ என்ற சீன திரைப்பட தலைப்பின் உள் அர்த்தம், இந்த அரிய கனிம விவகாரங்களுக்கு சரியான பதிலாக இருக்கும். மறைவிலிருந்து ஆட்டி வைக்கும் சில நபர்களை இந்த கதை சுட்டிக்காட்டுகிறது.
உலக வர்த்தகத்திற்கும், இந்த திரைப்படம் வெளிப்படுத்தும் கதைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.இந்தியாவில் புலியை தேசியவிலங்காக கொண்டதில் நாம் பெருமை கொள்கிறோம். தைரியம் என்பது நம் உள்ளார்ந்த மரபு. பெரும் ஆற்றல், அறிவுக்கூர்மை கொண்ட நம் நாடு எத்தருணத்திலும் பின்வாங்கக்கூடாது. எனவே, உற்பத்தியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள், சட்ட சிக்கல்கள் போன்றவற்றை, இந்திய அரசு விரைந்து தீர்க்க வேண்டும். உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் இந்த ஆதரவானது, பிறருக்காக குரல் கொடுத்து பேசி கூச்சலிடும் சில தீயசக்திகளை, சூழ்ச்சிக்காரர்களின் செயல்களை செயலிழக்க செய்துவிடும். இதன் அடிப்படையில் நாம் ஒரு முடிவை எட்டுவோம்.

