தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளில் தொடர்புடைய பெண் உட்பட 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர்.
கடந்த 21.11.2021 அன்று 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஏரல் சிவகளை பகுதியை சேர்ந்த பண்டாரசாமி (48), அவரது மனைவி மாரியம்மாள் (46), இசக்கி மகன் மாடசாமி (எ) பாசி (44), ஆகிய 3 பேரையும் ஏரல் போலீசார் கைது செய்தனர். கடந்த 23.11.2021 அன்று 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்வதற்காக கடத்திச் சென்ற மாசார்பட்டி, தாப்பாத்தி அகதிகள் முகாமைச் சேர்ந்த முருகையா மகன் சுஜீவன் (எ) சந்தோஷ் (22) என்பவரை எட்டையபுரம் போலீசார் கைது செய்தனர்.
மேற்கண்ட வழக்குகளில் கைதான மாரியம்மாள், பண்டாரசாமி மற்றும் மாடசாமி (எ) பாசி, சுஜீவன் (எ) சந்தோஷ் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் 4பேரையும் குண்டர் சடத்தில் கைது செய்ய ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டார்.
அதன்பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் அதற்கான ஆணைகளை பாளையங்கோட்டை சிறையில் வழங்கினர். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 26 பேர், கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 22 பேர் உட்பட 195 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

