பள்ளி, கல்லுாரி அருகே செயல்படும் கடைகளில் கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டு ஒழிப்பு வேட்டை நடத்த வேண்டும்’ என, டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். இத்தகைய குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவோரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்
கஞ்சா, குட்கா மொத்தக் கொள்முதல், விற்பனை செய்யும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்
போதை பொருள் மற்றும் லாட்டரி சீட்டு பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களை அடையாளம் கண்டு, மனநல ஆலோசகர் உதவியுடன் அவர்களை மீட்க வேண்டும்
பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகே, குடியிருப்போரை இணைத்து, ‘வாட்ஸ் ஆப்’ குழு துவங்கி, ரகசிய தகவல்களை சேகரித்து போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆந்திராவில் பயிரிடப்படும் கஞ்சா பயிரை ஒழிக்க அம்மாநில போலீசாருடன் விஷேச கூட்டு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இதை மாநில போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் முன்னின்று செயல்படுத்த வேண்டும்
பள்ளி, கல்லுாரி அருகே, கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள், லாட்டரி சீட்டு விற்போர் மீது, டிச., 6 – ஜன., 6 வரை, ஒரு மாதம் கஞ்சா, லாட்டரி சீட்டு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இதற்கு உளவு போலீசார் உதவி செய்ய வேண்டும்
இப்பணிகளை, சென்னை போலீஸ் கமிஷனர், சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஆகியோர் கண்காணித்து தினமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

