நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் தடையின்றி விபச்சாரம் நடத்த அனுமதி வழங்கி புரோக்கர்களிடம் பல லட்சம் லஞ்சம் வாங்கியதாக வந்த புகார்!! 2 இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு!!
சென்னை: விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றிய போது அழகிகளை விடுவிக்கவும், தடையின்றி தொழில் நடக்கவும் விபச்சார புரோக்கர்களிடம் பல லட்சம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் மற்றும் சைதாப்பேட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சரவணன் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சாம் வின்சென்ட். இவர் தற்போது சென்னை மாநகர காவல் துறையில் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார்.
சாம்வின்சன்ட் கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதேபோல், சைதாப்ேபட்டை காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சரவணன். இவர் புழுதிவாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இன்ஸ்பெக்டர்கள் சாம் வின்சென்ட் மற்றும் சரவணன் ஆகியோர் கடந்த 8.1.2018 மற்றும் 15.5.2018ம் ஆண்டுகளில் விபச்சார தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்தனர். அந்த காலக்கட்டத்தில் இருவரும் சென்னையில் ஸ்பா மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் விபச்சாரம் நடத்திய புரோக்கர்களிடம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி கொண்டு விபச்சாரம் தடையின்றி நடக்க உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இவர்கள் பணி காலத்தில் வெளிநாட்டு அழகிகள் மற்றும் சினிமா நடிகைகள் பலர் விபச்சார வழக்கில் சிக்கிய போது அவர்களை விடுவிக்க பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் இவர்கள் மீது உளவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டர்கள் இருவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதில் சென்னையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் தடையின்றி விபச்சாரம் நடத்த அனுமதி வழங்கி புரோக்கர்களிடம் பல லட்சம் லஞ்சம் வாங்கியது உறுதியானது. அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்ஸ்பெக்டர்கள் சாம்வின்சென்ட் மற்றும் சரவணன் ஆகியோர் மீது 13(2)r\w13(1)(d)pcAct,1988பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துனர்.
அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை
டி.எஸ்.பி சங்கர் தலைமையிலான குழு கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் உள்ள இன்ஸ்ெபக்டர் சாம்வின்சென்ட் மற்றும் புழுதிவாக்கத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் சரவணன் வீடுகளில் இன்று காலை 9 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது வீட்டில் இருவர்களை யாரையும் வெளியே அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த நபர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இன்ஸ்பெக்டர்கள் இருவர் வீட்டில் உள்ளவர்களிடம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் தொலைபேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இந்த அதிரடி சோதனையில் வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் மற்றும் விபச்சார புரோக்கர்களிடம் பல லட்சம் வாங்கிய பணத்திற்கான வங்கி கணக்குகள் அனைத்தும் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இருவரும் தங்களது வருமானத்திற்கு அதிகமாக விபச்சார தடுப்பு பிரிவில் இருந்து போது சேர்த்த சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபச்சார புரோக்கர்களிடம் லஞ்சம் வாங்கியதாக இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வரும் சம்பவம் போலீசாரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

