“திமுக ஆட்சி, விடியலை நோக்கி பயணிக்கிற ஆட்சி. வணிகர்களுக்கு நிச்சயம் விடியல் காண்போம்” என நாசரேத் வணிகர் சங்க ஆண்டு விழாவில் கனிமொழி எம்பி தெரிவித்தார்.
நாசரேத் நகர வணிகர் சங்க 21ஆம் ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு சங்கத் தலைவர் ஜெபஸ் திலகராஜ் தலைமை வகித்தார். ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிர்வாகக்குழு உறுப்பினர் ரஞ்சன் வரவேற்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா சங்க கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதில் கனிமொழி எம்பி கலந்து கொண்டு,தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் , ஏழை எளியவர்கள் 120பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
அவர் பேசுகையில், ஒன்றிய அரசு கொண்டு பணம் மதிப்பிழப்பு, சிறு தொழிலாளர்களை வஞ்சிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி.யால் பெரும் பாதிப்புள்ளாகியுள்ளனர். இதில் வியாபாரிகள் போராடி வருவதற்குள்¢ கொரோனா தொற்று வந்து விட்டது. இதனால் வியாபாரிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். வியாபாரிகளின் பாதிப்பகளை தீர்க்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். நாசரேத் வியாபாரிகள் பல கோரிக்கைகள் வைத்துள்ளனர். பஸ் நிலையம் அருகில் உள்ள மதுகடை மாற்றப்பட்டு வேறு இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், ரெயில் வசதி கேட்டுள்ளனர். மத்திய ரெயில்வே துறை அமைச்சர், மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கு செயல்பட்ட நூற்பாலைக்கு பதில் வேறு தொழில் வாய்ப்பு கேட்டுள்ளனர். நாசரேத் மீண்டும் பொழிவுறும் வகையில் நூற்பாலை இருந்த இடத்தில் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிட்கோ தொழில் பேட்டையில் பல்வேறு தொழில்கள் அமைக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.வணிகர்கள் இருளில் இருப்பதாகச் சொன்னார் விக்கிரமராஜா. நடைபெறும் திமுக ஆட்சி,விடியலை நோக்கி பயணிக்கிற ஆட்சி. ஆகவே,வணிகர்களுக்கு நிச்சயம் விடியல் காண்போம். நாசரேத் எப்போதும் திமுகவுக்கு செல்வாக்குள்ள பகுதியாகும். நாசரேத் வளர்ச்சி பெற திமுக என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் என்றார்.
தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், செந்தமிழ் தொண்டர் ஒய்வுபெற்ற பேராசிரியர் காசிராஜன், சமூக சேவகர் மிஸ்பா, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவ அலுவலர் விஜயகுமார் மற்றும் செவிலியர்களை கௌரவித்து கேடயம் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், நாசரேத்திற்கு என்னென்ன தேவைகள் என பல்வேறு கோரிக்கை மனுக்கள்கொடுத்துள்ளனர்.நாசரேத்தில் நூற்பாலை மூடப்பட்டதால் வியாபாரிகளும், தொழிலாளர்களும் பாதிப்புள்ளாகியுள்ளனர். இப்பகுதி மக்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையிலும், தொழில் வளம் பெறும் வகையில் தொழிற்சாலை கொண்டு வர தமிழக தொழிற்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொரோனா தொற்றை ஓடுக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக கையாண்டு வருகிறார்.
நாசரேத்தில் புதியதாக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கேட்டுள்ளனர். குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அருகில் உள்ள சிட்கோ தொழில்பேட்டையில் நிலங்கள் அதிக விலை உள்ளதாகவும், அதனை குறைத்தால் தொழில் அமைக்க எதுவாக இருக்கும் என தெரிவித்தனர். விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவால் வியாபாரிகள், தொழிலாளர்கள் 2ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டுள்ளார். வியாபாரிகளின் நிலை உணர்ந்த கட்சியாக திமுக உள்ளது. வியாபாரிகளின் இன்னல்களை போக்கும் வகையில் அவர்களிடம் கருத்து கேட்டு முதல்வர் இன்னல்களை போக்கும் வகையில்செயல்பட்டு வருகிறார் என்றார்.
தொடர்ந்து வணிக சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா பேசுகையில், நாசரேத் பகுதி முன்பு சாத்தான்குளம் தொகுதியில் இருந்தது. வெளியூரில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதால் தொகுதி பறி போய் நாசரேத் தற்போது திருச்செந்தூர் தொகுதியில் உள்ளது. தற்போது கோரிக்கைகளை எளிதில் நிறைவேற்றும்வகையில் தொகுதி எம்.எல்.ஏ.,வாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செயல்பட்டு வருகிறார். நாசரேத் பகுதியில் நீர்மட்டம் குறைந்து உவர்ப்பு தண்ணீராக மாறியதால் இப்பகுதி மக்கள் பாதிப்புள்ளாகி வருகின்றனர். ஆதலால் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை இப்பகுதிக்கு வழங்கும் வகையில் அதில் தடுப்பணை அமைத்து இப்பகுதிக்கு திருப்பி விட வேண்டும் என்றார்.
முன்னதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், காமராஜ், தென்காசி மாவட்ட தலைவர் வைகுண்டராஜன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் பிடானேரியில் அமையஉள்ள தொழிற்பேட்டையில் அதிக தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும், நாசரேத் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திட வேண்டும், நாசரேத் முதல் குரும்பூர் வரையுள்ள தார் சாலையை விரிவாக்கம் செய்யும் போது பழைய சாலைகளை அப்புறப்படுத்தி சாலையின் உயரத்தை அதிகரிக்காமல் புதிய சாலை அமைத்து மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும், நாசரேத் வழியாக இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க செயலாளர் செல்வன், பொருளாளர் ஜான், துணைத் தலைவர்கள் ஆறுமுகம், தங்கப்பழம், இணை செயலாளர் அகிலன், நகர திமுக செயலாளர் ரவிசெல்வகுமார், மாவட்ட வர்த்தக பிரிவு துணை செயலாளர் ஜமீன் சாலமோன், ஒன்றிய திமுக செயலாளர் பார்த்திபன், மாவட்ட பிரதிநிதி அலெக்ஸ் பிரிட்டோ, டியூஜே மாவட்ட கௌரவ தலைவர் விஜயராஜா, சாத்தான்குளம் நகர காங்கிரஸ் தலைவர் வேணுகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொணடனர். நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ் நன்றி கூறினார்.

