மொபைல் கம்பெனி வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவதுபோல பேசி, வங்கி கணக்கிலிருந்து பணம் மோசடி செய்த 3 நபர்களை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம்பிரிவில் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரில், கடந்த 26.09.2021 அன்று அவருடைய தொலைபேசி எண்ணிற்கு மொபைல் கம்பெனியின் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து வருவது போல குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் அவருடைய செல்போன் எண்ணின் சிம்கார்டுக்கான ஆவணங்கள் சமர்பிக்கப்படாமல் உள்ளதாகவும், 24 மணிநேரத்திற்குள் சமர்பிக்காவிடில் செல்போன் சேவை நிறுத்தப்படும் என்றும் அதை தவிர்ப்பதற்காக வாடிக்கையாளர் சேவை மைய எண் என்று கூறி ஒரு செல்போன் எண்ணை கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டதாவும் அதை உண்மையென நம்பி அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது, எதிரிமுனையில் பேசிய நபர் உடனடியாக 5 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக www.recharrgecube.com என்ற இணையதளத்திலிருந்த Fast Support என்ற app-ஐ பதிவிறக்கம் செய்து பணம்செலுத்துமாறு கூறியுள்ளார்.
இதனை நம்பிய மேற்படி நபர் தனது மொபைல் மற்றும் மனைவியின் மொபைலில் மேற்படி app-ஐ பதிவிறக்கம் செய்து தனது வங்கி கணக்கு மற்றும் மனைவியின் 2 வங்கி கணக்கு விபரங்களை கொடுத்து பணத்தை செலுத்த முயன்றுள்ளார். சிறிது நேரத்தில் 3 வங்கி கணக்குகளிலிருந்தும் மொத்தம் ரூ.13,09,984/- எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. உடனே மேற்படி நம்பரை தொடர்பு கொண்டபோது, போனை எடுக்காமல் இருந்துள்ளனர். உடனே, ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மேற்படி நபர் இது குறித்து சென்னை மத்தியகுற்றபிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் நாகஜோதி, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் ஷாஜிதா, உதவி ஆணையாளர் வேல்முருகன் ஆய்வாளர் வினோத்குமார், உதவி ஆய்வாளர்கள் மேன்லி லாமேக், அகிலன், சிறப்பு உதவி ஆய்வாளர் ரகுபதி. தலைமைக்காவலர்கள் ஜெகநாத், கலைச்செல்வி பத்மாவதி முதல் நிலைக்காவலர்கள் மஞ்சுளா, பாஸ்கர், விஜயகண்ணா, காவலர்கள் பாண்டீஸ்வரி, நித்தியானந்தம் மாரிமுத்து ஆகியோர் அடங்கிய தனிப்படை காவல் குழுவினர், விசாரணை மேற்கொண்டு, மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய 1) பிஷ்வநாத் மண்டல் (வ/25) ஜார்கண்ட் மாநிலம் 2) பாபிமண்டல் (வ/31) ஜார்கண்ட் மாநிலம் 3) ராம்புரோஷாத் நாஷ்கர் (வ/30) மேற்கு வங்க மாநிலம் ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 செல்போன்கள், 160 சிம்கார்டுகள், 19 வங்கி கணக்கு புத்தகங்கள், 4 ஸ்வைப்பிங் மிஷின்கள், ரொக்கம் ரூ.11,20,000/-, 140 கிராம் தங்க நகைகள் மற்றும் 1 கார் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு, காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

