திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியில் அனைத்து தரப்பினரிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் முக்கிய நிர்வாகி சுங்கச்சாவடியை கடக்கும் போது, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சுங்க கட்டணம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் சிலர், எங்கள் வாகனத்திற்கு சுங்க கட்டணம் கேட்கிறாயா? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாக்குவாதம் முற்றியாதால், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் சுங்கச்சாவடியில் உள்ள பொருட்கள், கண்ணாடியை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல் காணப்பட்டது.
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய சம்பவத்தால் அந்த பகுதியில் பயணித்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பதட்டமடைந்து, அங்குமிங்கும் ஓட துவங்கினர். சிறிது நேரத்தில், அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
சுங்கச்சாவடியில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அந்த பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை சேகரித்து, தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்? யார்? என்பது குறித்தும், இந்த தாக்குதல் நடந்ததன் முழு பின்னணி குறித்தும் சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகளிடம் கொடை ரோடு போலீசார் முழுமையான விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
பட்டப்பகலில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இந்த சுங்கச்சாவடியில் நடந்த துணிகர தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை விசாரணை முடுக்கி விடப்பட்டதால், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னணி குறித்த விபரம் விரைவில் வெளிவரும்.
செய்தி தொகுப்பு: நமது சிறப்பு செய்தியாளர்



