வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பகுதியில் மீன்பிடி சீசன் துவங்கியுள்ள நிலையில் கடலில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாகவும் கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் தொழிலுக்கு செல்லாததால் வருமான இழப்பு ஏற்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த காலத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம், காரைக்கால் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் தங்களது படகு மற்றும் குடும்பத்தினருடன் வந்து தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள்.
இவர்களுடன் நாகை மாவட்டத்தில் உள்ள நம்பியார்குப்பம், சீர்காழி, தரங்கம்பாடி, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், கோடியக்காடு, கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை பகுதி மீனவர்களும் சேர்ந்து மீன்பிடிப்பார்கள்.
சீசன் காலத்தில் கடலுக்குள் செல்லும் மீனவர்களது வலைகளில் மயில் மீன், வாவல், திருக்கை, புள்ளி நண்டு. கல் நண்டு, நீலக்கால் நண்டு போன்ற பல்வேறு வகையான அதிக விலை போகக்கூடிய மீன் இனங்களும், சிங்கி இறால் போன்ற இறால் இனங்களும் அதிகளவில் பிடிபடும்.
இப்படி பிடிக்கப்படும் மீன்கள் அப்பகுதியில் உள்ள மொத்த வியாபாரிகள் மூலம் வாங்கப்பட்டு மீன்கள் சுத்தம் செய்து கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், டப்பாவில் பேக்கிங் செய்யப்பட்ட இறால் மற்றும் நண்டு வகைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.
இதனால் நாள்தோறும் சுமார் 30 லட்சம் முதல் 40 லட்ச ரூபாய் வரை மீனவர்களுக்கு வருவாய் கிடைக்கும் நிலையில் கடலில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர்.
தற்போது மீன்பிடி சீசன் காலத்தில் நல்ல வருவாய் கிடைக்கக் கூடிய காலத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் வருமான இழப்பு ஏற்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஓரிரு நாட்களில் சரியாகும் என நம்பிக்கையில் மீனவர்கள் உள்ளனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

