நாகை மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2021 விற்பனை – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்
நாகப்பட்டினம் மாவட்டம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2021 விற்பனையை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்கள்.
தீபாவளி 2021 விற்பனையினை துவக்கி வைத்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு நலத்திட்டங்களை அவர்கள் வழங்கி வருகிறார். அதனடிப்படையில் பண்டிகை காலங்களில் அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அனைவரும் கதர் ஆடை அணிந்தால் நெசவாளர்களின் குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
தமிழக அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 86 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரியமான துணி ரகங்களை இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக அனைவரும் பயன்படும் வகையில் விற்பனை செய்து நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர முக்கிய பங்கு அளித்து வருகிறது. காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டுப் புடவைகள், காஞ்சிப்புரம், ஆரணி, திருபுவனம் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள் கோவை கோரா காட்டன் சேலைகள், கூறை நாடு புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கை வண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சேலைகள், கால்மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட்டு மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தீபாவளி -2021 பண்டிகையை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையத்திற்கு ரூ.75 இலட்சமும், வேதாரண்யம் விற்பனை நிலையத்திற்கு ரூ.60 இலட்சமும் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் செயல்படுத்திவரும் கனவு நனவு திட்டத்தின்படி வாடிக்கையாளர்களின் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.500 வரை 10 மாத தவணைகள் மட்டும் வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12வது மாத தவணைகளை “கோ-ஆப்டெக்ஸ்” நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு இரகத்துணிகளை வாங்கி பயன்பெறலாம். இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக தமிழக அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அனைத்து கைத்தறி ஆடைகளுக்கும் வழங்கப்படுகிறது. எனவே அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கும் கைத்தறிக்கு அனைவரும் பயன்படுத்தி கோ-ஆப்டெக்ஸ் ஆடைகளை அணிய உதவிட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் மாலி, மாவட்டச் செயலாளர் கௌதமன், வட்டாட்சியர் ஜெயபாலன், கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் சாதிக் அலி, வர்த்தக மேலாளர் தணிக்கை கந்தசாமி, விற்பனை நிலைய மேலாளர் ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

