ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் – மாவட்ட ஆட்சியர் அழைப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் ஐந்தாவது “மெகா தடுப்பூசி முகாம் 35,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு 10.10.2021 அன்று நடைபெறும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அனைத்து பொது மக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்
தமிழ்நாடு முழுவதும் கோவிட் – 19 கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் கட்டுபடுத்திட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணையின்படி, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் “மெகா தடுப்பூசி முகாம்” நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் வெல்ல தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் 10.10.2021-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம் மற்றும் 328 சிறப்பு முகாம்களில் 35,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு “மெகா தடுப்பூசி முகாம்” நடைபெறவுள்ளது.
எனவே, மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மீனவப் பெருமக்கள், முன்களப்பணியாளர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் மற்றும் அனைத்து தரப்பட்ட பொதுமக்களும் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

