குளித்தலை அருகே பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான கோபால் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கருப்பத்துரைச் சேர்ந்தவர் கோபால் (53). அகில இந்திய தேவேந்திர குல தலைவர் பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான இவர் மீது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொலை வழக்குகள் உள்ளன. இவருக்கு பொன்னுமணி என்ற மனைவியும், தமிழ்பொன்னி, கயல்பொன்னி என இரு மகள்களும். நரேன் கார்த்திக், நரேன் ராஜ் என்ற இரட்டை மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டருகே உள்ள கோபாலுக்குச் சொந்தமான வயல்வெளியில் மர்ம நபர்களால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தகவலறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த கோபாலின் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் கொலை குறித்து விசாரணை நடத்தினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

