வீடு வரை உறவு…, வீதி வரை மனைவி…, காடு வரை பிள்ளை… கடைசி வரை யாரோ? என்று கண்ணதாசன் பாடல் மூலம் கேள்வி எழுப்பி இருப்பார். அவர் இன்று நம்மோடு இருந்திருந்தால், காடு வரை பிள்ளை… கடைசி வரை லஞ்சம்… என்று பாடல் எழுதிருப்பார். பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம் கொடுக்காமலும், லஞ்சம் வாங்காமலும் மனிதன் பூமியில் வாழ்வது அரிதிலும் அரிதே.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கேற்ப, சமீபத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மின் தகன மயானத்தில் நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தூத்துக்குடி, 3 ஆம் மைல், இந்திரா நகர், 3A/389 (1) என்ற முகவரியில் வாழ்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் 04.10.2021 அன்று இறந்ததைத் தொடர்ந்து, 05.10.2021 அன்று தூத்துக்குடி, மாநகராட்சி மின் தகன மையத்தில் பிற்பகலில் தகனம் செய்யும் பொருட்டு அன்று காலையில் அங்குள்ள அலுவலகத்தில் அனுகி முன்தகவல் கொடுக்கச் சென்றபோது, குலசை தசரா விழாவிற்குப் பணியாளர்கள் சென்றுவிட்டதால் இன்று விடுமுறை என்று கூறியுள்ளனர். இதனையடுத்து, மீண்டும் தெரிந்தவர் மூலமாகப் பேசியபோது சரி என்று ஒப்புக்கொண்டனர். அதைத் தொடர்ந்து பிற்பகல் 3.45 மணி அளவில் தகனப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள பணியாளர்கள் பணம் கேட்டுள்ளனர். அதற்கு உறவினர் கஷ்டப்பட்ட குடும்பம் எனவே 400 ரூபாய் தருகிறோம் என்று கூறியுள்ளார். அதற்குப்பின் அவர்கள், ஏற்கெனவே ஓர் உடல் எரியூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எனவே, 7 மணிக்குத் தான் உங்கள் உறவினர் உடலை உள்ளே வைப்போம். முடிவதற்கு ஒன்பது மணி ஆகும், இயல்பாக எங்களுக்கு ஆறு மணிக்குப் பணி முடிந்துவிடும்; நாளைக்குத்தான் சாம்பல் தருவோம் என்று கூறினர். அதற்கு உறவினர் இன்றைக்குப் பால் வைத்துள்ளோம்; சாப்பாடு எல்லாம் சொல்லியாச்சி என்று கூறியுள்ளார். அதற்குப் பணியாளர், உங்களுக்காகத்தான் வேலை செய்ய வேண்டும். எனவே ஆயிரம் ரூபாய் தர வேண்டும், 5.30 மணிக்கு உள்ளே வைத்து விடலாம் என்று கூறினர். வேறு வழியின்றி, அவர்கள் கேட்ட பணம் கொடுத்தனர். விடுமுறை என்றும் 7 மணிக்குத்தான் வைப்போம், மறு நாள்தான் சாம்பல் தருவோம் என்றும் பிறகு 5.30 மணிக்கு என்றும் கூறியவர்கள் 4.20 மணிக்கு உள்ளே வைத்து 5.30 மணிக்குச் சாம்பல் கொடுத்துவிட்டனராம்.
போதிய பணியாளர்கள் இல்லை, நாங்கள் நினைத்த நேரத்தில் தான் எரியூட்டுவோம் என்று இங்குள்ள பணியாளர்கள் கூறிவருக்கின்றனராம்.
மின் தகன மையத்தில் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. அதில் தகனம் செய்ய கட்டணம் கிடையாது என்றும், அன்பளிப்பு வழங்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புகார் தெரிவிக்க மூன்று தொலைபேசி எண்கள் போடப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்களை தொடர்பு கொண்டால் நோ ரெஸ்பான்ஸ்.
எற்கெனவே உயிரை இழந்து வேதனையில் இருப்பவர்களின் மன நிலையையும், இந்த இடத்தில் ஒன்றும் பேசக்கூடாது என்ற மனநிலையையும் பயன்படுத்திக் கொண்டு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றனர். பணமென்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்பார்கள். ஆனால் இங்கோ, பிணம் என்றால் வாயைப் பிளக்கும் மனிதர்களையே காண முடிகிறது! இங்கே வாங்கும் பணம் மேல் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் வரை கொடுக்க படுவதாக கூறபடுகிறது. லஞ்சம் என்ற கொடிய விஷத்தினால் சமூகத்தின் நலன் பாழ்பட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும் போதிய பராமரிப்பு இன்றி, சுகாதாரமற்ற முறையில் இந்த மின் தகன மேடை செயல் படுவதாலும், குறித்த நேரத்தில் எரியூட்டும் பணிகள் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி பணம் பறிப்பது வாடிக்கையாக நடக்கிறதாம்.
மின் தகன மேடையில் நடக்கும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மின் தகன மேடையை தனியார் பராமரிப்பு குழுவிடம் ஒப்படைத்து அவர்களின் பணிகளை கண்காணித்தால் மட்டுமே இதுபோன்ற அவலநிலை தொடராமல் தடுக்க முடியும்.
அனாதை பிணங்கள், ஏழை-எளிய குடும்பத்தில் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு பணிகளை அவரவர் சார்ந்த மத சம்பிரதாயபடி, மனித நேயத்தோடு செயலாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் ஏராளமாக இருந்து வருகின்றனர்.
சமூக அக்கறையோடு செயல்படும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை மூலம் மின் தகன மேடை பராமரிக்கப்பட்டால், சுகாதார கேடு, முறைகேடு, லஞ்சம் ஆகிய செயல்களுக்கு முடிவுகட்டும் வகையில் மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இந்த விசயத்தில் மாநகராட்சி ஆணையர் தனி கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பார் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் முன்னோடி மாவட்டமாக விளங்கி வரும் தூத்துக்குடி மாவட்டத்தில் மின் தகன மயானத்தில் நடக்கும் இந்த கொடுமையை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
செய்தி தொகுப்பு: நமது சிறப்பு செய்தியாளர்


