சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கையில் கத்தியை வைத்து அதனை செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் கைது.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கையில் நீண்ட கத்தியுடன் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கண்ணன் அவர்களுக்கு சம்பந்தப்பட்டவர் யார் என்பதை கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் சாத்தான்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. கண்ணன் அவர்கள் மேற்பார்வையில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன், உதவி ஆய்வாளர் திரு. ஜான்சன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டதில் சாத்தான்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் ரூபன் கிதியோன் (42) என்பவர் நேற்று (04.10.2021) அவரது வீட்டின் மொட்டை மாடியில் வைத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கையில் பயங்கரமான கத்தியுடன் அருகில் பீர் பாட்டிலுடன் செல்போனில் புகைப்படம் எடுத்து அதை வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூபன் கிதியோன் என்பவரை கைது செய்தனர்.
மேலும் எதிரி ரூபன் கிதியோன் மீது ஏற்கனவே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்குகள் உட்பட 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

