நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 01.01.2022-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களும் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் சேர்த்திட ஒரு அரிய வாய்ப்பு.
தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, எதிர்வரும் 13.11.2021 (சனிக்கிழமை), 14.11.2021 (ஞாயிற்றுக்கிழமை), 27.11.2021 (சனிக்கிழமை) மற்றும் 28.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு தினங்களில் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலுள்ள 06 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும்; முகவரி மாற்றம் செய்திட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
இச்சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் முதல் முறை பெயர் சேர்ப்பதற்கான அல்லது ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு வசிப்பிடம் மாறியதால் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6, வாக்காளர் பட்டியலில் வேறொரு நபரின் பெயரை சேர்க்க ஆட்சேபித்தலுக்கான மற்றும் தன்னுடைய பெயரையே நீக்கக் கோருவதற்கான மற்றும் இறப்பு மற்றும் வசிப்பிடம் மாறிய காரணத்தினால் வேறொரு நபரின் பெயரை நீக்கக் கோருவதற்கான படிவம்-7, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விவரங்களை திருத்துவதற்கான படிவம்-8 மற்றும் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு (ஒரு சட்டமன்ற தொகுதிக்குள்) முகவரி மாற்றத்திற்கு படிவம்-8ஏ ஆகியவைகளை பூர்த்தி செய்து வழங்கிடலாம்.
எனவே, பொதுமக்கள் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரையிலும், மற்ற நாட்களில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலும் பூர்த்தி செய்த படிவங்களை வழங்கலாம். இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ளுமாறு நாகப்பட்டினம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அருண்தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

