தூத்துக்குடியில் தந்தையின் கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் ஒருவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி டி.எம்.பி காலனி 6வது தெருவை சேர்ந்தவர் பட்டாணி மகன் சிவபெருமாள் (45). ஆட்டோ டிரைவர். இவரும் தொம்மையார் காலனியைச் சேர்ந்த மாடசாமி மகன் ஆறுமுகம் (31), அவரது தம்பி சொர்ணராஜ் (28) ஆகிய 3 பேரும் நண்பர்கள். நேற்று மாலை மையவாடி அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் சிவபெருமாளை, ஆறுமுகம் மற்றும் சொர்ணராஜ் ஆகிய இருவரும் குத்திக் கொலை செய்தனர். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிவபெருமாளின் மகன் வேல்முருகன் (23), தந்தையின் கொலையால் ஆத்திரம் அடைந்து ஆறுமுகம் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரது தந்தை மாடசாமி (58) என்பவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தெ்னபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் கொலை முயற்சி வழக்குப் பதிந்து வேல் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். தந்தையின் கொலைக்கு பழிக்குப் பழியாக நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

