தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவிட் 19 மெகா தடுப்பூசி திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் முகாமிற்கான கண்காணிப்பு அலுவலர் அ.சிவஞானம், தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவிட் 19 மெகா தடுப்பூசி திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு / மெகா கோவிட் 19 முகாமிற்கான கண்காணிப்பு அலுவலர் அ.சிவஞானம், தலைமையில் இன்று (11.09.2021) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு / மெகா கோவிட் 19 முகாமிற்கான கண்காணிப்பு அலுவலர் அ.சிவஞானம், பேசியதாவது: தமிழ்நாட்டில் கரோனா முதல் மற்றும் இரண்டாவது அலைகள் ஏற்பட்டு அரசின் தீவிர நடவடிக்கைளால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது அலை பாதிப்பு ஏற்படாமல் தடுத்திடும் பொருட்டு அரசு 18-வயதிற்கு மேற்ப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நமது தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று பரவலை தடுத்திடும் பொருட்டு அரசின் உத்தரவின்படி 12.09.2021 அன்று கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தி ஒரு லட்சம்நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மெகா தடுப்பூசி முகாம் அந்தந்த பகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடி மையங்கள் அமைந்துள்ள 805 இடங்களில் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாமில் பயிற்சி மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட அனைத்து துறையினரும் முழுவீச்சில் பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 நடமாடும் மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டு மாற்றுத் திறனாளிகள், வீடுகளில் இருந்து வெளியில் வரமுடியாத முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளனர்.
அரசு ஊழியர்கள், காவல்துறையினர் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதால் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுய உதவி குழுக்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும். மேலும் அந்தந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம் வாக்காளர் பட்டியல் சரிபார்த்து இதுவரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அந்நத்த பகுதியில் உள்ள ஊராட்சிமன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிகள் மூலம் பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்கள் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முகாமில் எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டும். மேலும், கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும். சுகாதாரத்துறையினர் மட்டும் தடுப்பூசி போடும் பணிகளை சிறப்பாக செய்திட முடியாது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அவர்களை ஒருங்கிணைத்தல், தேவையான உதவிகள் செய்து தருதல் உள்ளிட்ட பணிகளை பல்வேறு துறைகளை சேர்ந்த பணியாளர்களும் இணைந்து முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிட வேண்டும். அப்போதுதான் இலக்கினை அடைய முடியும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தை கொரொனா நோய்த்தொற்று இல்லா மாவட்டமாக மாற்றிட முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தெரிவித்ததாவது: கரோனா நோய் தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள தடுப்பூசி போடுவதுதான் தற்போதுள்ள ஒரே வழி. தடுப்பூசி போடுவதால்தான் மனித இனம் மேலோங்கி இருக்கிறது. எப்போதும் தடுப்பூசி போடுவதுதான் பாதுகாப்பானதாக இருக்கும். தடுப்பூசிகள் என்றுமே மக்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. எனவே பொதுமக்கள் கரோனா தடுப்பூசி போட்டு நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதன் மூலம் கரோனா நோய் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும். தடுப்பூசி போடவில்லை என்றால் கரோனா நோய் தொற்று போடாதவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு பரவும் அபாயம் அதிகம் உள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் மூன்றாம் அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். முககவசம் அணிய வேண்டும். சாணிடைசர் பயன்படுத்த வேண்டும். தமிழக அரசு பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குகிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கரோனா தொற்று வந்தாலும் பாதிப்பு குறைவாகதான் இருக்கும். எனவே தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கரோனா நோய் தொற்றில் இருந்து நம்மை மட்டுமல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களையும் பாதுகாக்க முடியும். எனவே பொதுமக்கள் இந்த முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி ஆட்சியர் பயிற்சி ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சுகாதார பணிகள் இணை இயக்குநர் முருகவேல், துணை இயக்குநர்கள் பொற்செழியன் (தூத்துக்குடி), போஸ்கோராஜா (கோவில்பட்டி), மாநகர நல அலுவலர் வித்யா, வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கரநாராயணன் (கோவில்பட்டி), சிவசுப்பிரமணியன் (தூத்துக்குடி), செல்வநாயகம் (திருச்செந்தூர்), நகராட்சி ஆணையர்கள் சுகந்தி(காயல்பட்டிணம்), கிருஷ்ணமூர்த்தி (கோவில்பட்டி) மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

