கயத்தாறு அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைகளை திருடிய 3பேரை போலீசார் கைது செய்தனர். ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் முத்துராஜ் மனைவி சுதா (35) என்பவர் கடந்த 23ம் தேதி திருநெல்வேலியிருந்து கோவில்பட்டிக்கு அரசு பேருந்தில் பயணித்தபோது கயத்தாறு பேருந்து நிலையத்தில் பேருந்து வந்தபோது தனது கைப்பயில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் திருடு போயுள்ளது. இதுகுறித்து சுதா அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன் மேற்பார்வையில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆய்வாளர் முத்து தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குமார், காவலர்கள் பாலகிருஷ்ணன், பாலமுருகன், சத்திரியன், பெண் காவலர்கள் முனீஸ்வரி, முத்துலதா மற்றும் செல்வி. முருகேஷ்வரி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரியை கண்டுபிடித்து விரைந்து கைது செய்து திருடிய நகைகளை மீட்குமாறு உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படையினர் நேற்று கயத்தாறு புதிய பேருந்து நிலையத்தில் வாகன தனிக்கை மேற்கொண்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர்களான அய்யப்பன் மனைவி காளியம்மாள் (23) மற்றும் முத்துராஜா (எ) கீரி மனைவி முத்துமாரி (எ) தமிழரசி (22) என்பதும் கடந்த 23.08.2021 அன்று பேருந்தில் சுதாவின் பையிலிருந்து தங்க நகைகளை திருடியதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் தூத்துக்குடி வடபாகம், நாலாட்டின்புதூர் மற்றும் சிப்காட் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் 10 பவுன் நகைகள் திருடியிருப்பதும், திருடிய நகைகளை அம்பாசமுத்திரம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் அய்யப்பன் (35) என்பவரிடம் கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். நகை திருட்டில் 3 பேரைக் கைது செய்த தனிப்படையினரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.

