தூத்துக்குடியில் லாரியில் கடத்தி வந்த ரூ.10லட்சம் மதிப்புள்ள கடல் சிப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சுகதா ரஷீமா மற்றும் அதிகாரிகள் நேற்று இரவு தூத்துக்குடி பீச் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வேகமாக வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனையிட்டனர். அந்த லாரியில் தடை செய்யப்பட்ட கடல் சிப்பிகள், எவ்வித அனுமதியுமின்றி ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் வ்நத 2பேரையும் அதிகாரிகள் மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் வழக்குப் பதிந்து, குலசேகரபட்டனம் கருங்காலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலை மணி மகன் துரைராஜ் (40), மற்றும் கல்லாமொழி வடக்குத் தெருவைச் சேர்ந்த லட்சுமண பாண்டியன் மகன் இசக்கிமுத்து (32) ஆகிய 2பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் லாரி மற்றும் அதில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 12 டன் கடல் சிப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடல் சிப்பிகள் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக கல்லாமொழியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர் யார்? யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

