பங்காரு அம்மா அன்னதான திட்டத்தில் பணியாற்றிய செவ்வாடை தொண்டர்களுக்கு மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கொரோனா வைரசின் முதல் மற்றும் இரண்டாம் அலையினால் 2020, 2021 ஆண்டுகளில் தமிழகத்தில் வைரஸ் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்க அருளியிருந்தார்கள்.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் பசியாற்றும் பங்காரு அம்மா அன்னதான திட்டத்தின் கீழ் முதியோர் இல்லங்கள், பார்வையற்றோர் இல்லங்கள், அரசு மருத்துவமனை நோயாளிகள், மீனவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தெருவோர ஏழை மக்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் உட்பட ஏழை, எளிய மக்களுக்கு 10 நாட்களாக தொடர்ந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு, குடிநீர் பாட்டில்கள் மற்றும் நிவாரணப்பொருட்கள் 1000பேருக்கு வழங்கப்பட்டது.
பங்காரு அம்மா அன்னதான பணியில் தொடர்ந்து 10 நாட்கள் முழுமையாக பணியாற்றிய செவ்வாடை தொண்டர்களையும், ஆன்மிக இயக்க நிர்வாகத்தையும் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கினார்.
பின்னர், எஸ்.பி., பேசுகையில், இதுபோன்ற கொடுமையான காலகட்டத்தில் நீங்கள் மக்களுக்கு செய்த உதவி மிகப்பெரிய உதவியாகும். தற்போது இரண்டாவது அலையில் நீங்கள் உதவி செய்துள்ளீர்கள். அடுத்ததாக 3வது அலை வர உள்ளதாக கூறுகிறார்கள். இயற்கை இடர்பாடு என்பது எப்போது வேண்டுமானாலும் வரும். இதை கருத்தில் கொண்டு தொடர்ந்து மக்களுக்கு நீங்கள் சேவையாற்ற வேண்டும். உங்கள் இயக்கத்தைச் செர்ந்தவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி.ஆர்.முருகன், துணைத்தலைவர் பண்டாரமுருகன், பொருளாளர் கண்ணன், இணைச்செயலாளர்கள் வேள்விக்குழு கிருஷ்ணநீலா, இளைஞர் அணி செல்லத்துரை, பிரச்சாரம் முத்தையா, திருவிக நகர் சக்திபீட தலைவர் பொன்காசிராஜ், துணைத்தலைவர் திருஞானம், இளைஞர் அணி பாலசுப்பிரமணியன், வட்டத்தலைவர் திணேஷ் உட்பட ஆன்மிக இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.

