அரசு வேலை வாங்கித் தருவதாக வேலை இல்லா பட்டதாரிகள் 150 பேரை குறிவைத்து ரூ.5 கோடி வரை மோசடி செய்த தமிழ் மாநில முஸ்லிம் லீக் மாநில செயலாளர் உள்ளிட்ட 3 பேரும் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு துறைகளான அச்சு மற்றும் எழுதுபொருள் துறையில் உதவி பொது மேலாளர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர், மக்கள் தொடர்பு துறையில் ஏபிஆர்ஓ மற்றும் சத்துணவு அமைப்பாளர் ஆகிய பணிகளுக்கு ஆட்களை சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும், போலியான பணி நியமன ஆணைகள் கொடுத்து ஏமாற்றியுள்ளதாக சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த நந்தினி, அவரது கணவர் அருண் சாய்ஜி மற்றும் திருவான்மியூரை சேர்ந்த ரேஷ்மா தாவூத் ஆகியோரை கடந்த 30ம் தேதியன்று மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான ரேஷ்மா தாவூத் தமிழ் மாநில முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஷேக் தாவூத்தின் மகள் ஆவார். ரேஷ்மா தமிழ் மாநில முஸ்லிம் லீக் மாநில செயலாளராக உள்ளார். போலீஸ் விசாரணையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 85 நபர்களிடம் சுமார் 4 கோடி ரூபாய் வரை பெற்று போலி நியமன ஆணை வழங்கி மோசடி செய்தது தெரிந்தது.
மேலும் ரேஷ்மா தாவூத் மீது ஏற்கனவே 2016, 2017, 2019ம் ஆண்டுகளில் மத்தியக் குற்றப்பிரிவு மற்றும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வேலைவாய்ப்பு மோசடி, குற்றம் கருதி மிரட்டல் ஆகிய வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததது. கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி பிரிவில் புகார்கள் குவிந்தன. இதனால் மூன்று பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
ரேஷ்மா தாவூத் மற்றும் நந்தினி இணைந்து 150க்கும் மேற்பட்ட வேலை தேடும் இளைஞர்களிடம் இருந்து 5 கோடி ரூபாய் வரை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இருவரது வீடு மற்றும் அலுவலகத்தை போலீசார் சோதனை செய்ததில் போலி நியமன ஆணைகள், பணம் வசூல் செய்த பட்டதாரிகளின் பட்டியல், கணினி, கார் மற்றும் முக்கிய ஆவணங்கள் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரிடம் சிக்கியது. மேலும் ரேஷ்மா மோசடி செய்த பணத்தில் வாங்கிய கார் மற்றும் நில பத்திரங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் கலாராணி, உதவி ஆய்வாளர் ஹரிஓம் நமச்சிவாயம், சிறப்பு உதவி அனுமன், தலைமைக் காவலர்கள் சண்முகம், வரலட்சுமி மற்றும் காவலர் அபினேஷ் ஆகியோரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டி உள்ளார். பொதுமக்கள் அரசின் பல்வேறு துறைகளில் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கித்தருவதாக கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் சென்னை காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

