பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மத்திய இணை அமைச்சர் பொறுப்பை இன்று எல். முருகன் ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை, பாஜகவில் இணைந்தார். அவருக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
மேலும் சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் தேசிய செயலாளருமான எச். ராஜா, ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் திரு.அண்ணாமலை Ex.IPS அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய தலைமையில் தமிழகத்தில் பாஜக வேகமாக வளரும்” என பதிவிட்டுள்ளார்.

