தூத்துக்குடியில் அடிதடி, வெட்டு கஞ்சா உள்ளிட்ட பல வழக்குகளில் சம்மந்தப்பட்ட 5 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, ரவுடித்தனம், கஞ்சா, போதைப்பொருள், புகையிலைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதன்படி பல ரவுடிகள் கைது செய்யப்பட்டு, பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் 81 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயசீலன் தலைமையில் தலைமைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கம், சாமுவேல், முதல் நிலைக் காவலர்கள் செந்தில், முத்துப்பாண்டி, மகாலிங்கம், திருமணி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது முததையாபுரத்தைச் சேர்ந்த போத்தரவி மகன் வேல்முருகன் என்ற பானா முருகன் (29), அவரது தம்பி மாரிசெல்வம் (23), தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த கிருஷ்ண சுயம்பு மகன் இசக்கி செல்வம் என்ற செல்வம் (26), தாளமுத்துநகரைச் சேர்ந்த ராமன் மகன் டைட்டஸ் (21) மற்றும் முத்தையாபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கௌதம் (18) ஆகிய 5 பேரும் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், ஒருவரிடம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு வந்து நின்று கொண்டிருப்பது தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பானா என்ற வேல்முருகன் கோவில்பட்டி மேற்கு, தூத்துக்குடி தென்பாகம், முத்தையாபுரம், சேலம் மாவட்டம் மேட்டூர், விருதுநகர் மாவடம் காரியாபட்டி, பாணல்குடி ஆகிய காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, அடிதடி, வெட்டு மற்றும் கஞ்சா கடத்தல் என 15 வழக்குளில் ஈடுபட்டுள்ளவர் என்பது தெரியவந்துள்ளது. பிரபல ரவுடிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

