ஊத்துமலை அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண்ணை வெட்டிப் படுகொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள தெற்கு காவலாகுறிச்சி ஆர்.சி.சர்ச் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45), கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களின் மகள் ஷாலோம் ஷீபா (19). இவரும், அதே ஊரைச் சேர்ந்த முத்துராஜ் என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஷாலோம் ஷீபா முத்துராஜை திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து தனது மகளை வீட்டில் சேர்க்காமல் இருந்துள்ளார். ஆனால், பாக்கியலட்சுமி தனது மகளுடன் பேசி வந்தார். இந்நிலையில் ஊரில் அம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் முத்துராஜ் தனது மனைவி ஷாலோம் ஷீபாவுடன் கலந்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு சென்றபோது கணவன்-மனைவிக்கு இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. இதனால் ஷாலோம் ஷீபா தனது தாயாரிடம் இதுபற்றி கூறுவதற்காக வீட்டிற்கு சென்றார்.
அப்போது, கதவை மாரிமுத்து திறந்தார். உனக்கும் எனக்கும், சம்பந்தம் இல்லை. ஏன் எனது வீட்டிற்கு வருகிறாய் என்று சத்தம் போட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, ஷாலோம் ஷீபாவை சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரை வீட்டு வாசலில் போட்டு, அங்கு இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மாரிமுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ஷாலோம் ஷீபாவை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷாலோம் ஷீபா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

