கருங்குளம் யூனியன் சேர்மன் பதவியை கைப்பற்றும் முயற்சியில் திமுக-அதிமுக இடையே ஏற்பட்ட மோதலில் 4பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் பஞ்சாயத்து யூனியன் சேர்மனாக மணக்கரை ராஜேந்திரன் என்பவரின் மனைவி கோமதி என்பவர் உள்ளார். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். கருங்குளம் யூனியனில் அதிமுக 7, திமுக 5, அமமுக 2, புதிய தமிழகம் 1, சுயேட்சை 1 என மொத்தம் 16 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த இசக்கிதுரை என்பவர் சேர்மனாகும் முயற்சியில் அதிமுக கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதையறிந்த யூனியன் சேர்மன் கோமதி, அவரது கணவர் ராஜேந்திரன் உட்பட 18பேர், 10வது அதிமுக கவுன்சிலாரன ஆழிக்குடி கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முருகைய்யா மகன் சுடலைமுத்து என்பவரின் வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். அப்போது ஏற்பட்ட தகராறில் சுடலை முத்துவின் உறவினராக கிருஷ்ணன் (60), முருகைய்யா மகன் சிவராமன் (37), தளபதி மகன் முன்டசாமி (30), அர்ஜூனன் மகன் மகராஜன் (35) ஆகிய 4பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
மேலும், வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ், கார் கண்ணாடி உள்ளிட்டவை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்களாம். இதில், காயம் அடைந்த 4பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, யூனியன் சேர்மன் கோமதி ஆதரவாளரான மணக்கரை கிராமத்தைச் சேர்ந்த பார்வதி மகன் கணேசன் (30), ஆழிக்குடி முத்துரமலிங்கம் மகன் சங்கர் (32) ஆகிய 2பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் யூனியன் சேர்மன், அவரது கணவர் உட்பட 16பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

