கொடைக்கானல் மலை கிராம பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் கொடைக்கானல் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள கிளாவரை, கூக்கால், போளூர் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு திடீரென கை, கால், முகம் வீங்கி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றால் பாதிப்படைந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து அங்குள்ள சுகாதாரத் துறையினர் மூலம் அளிக்கப்பட்ட மருந்துகள் மூலம் தற்காலிகமாக குணமடைந்து மீண்டும் அதே நிலை ஏற்படுகிறது என கொடைக்கானல் மக்கள் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உடனடியாக தங்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொடைக்கானல் மேல் மலை கிராமத்தில் மர்மக் காய்ச்சலுக்கு இதுவரை 15 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் பீதி அடைந்து வருகின்றனர்
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல், மேல் மலை பகுதிகளான கூக்கல், போளூர், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்மக் காய்ச்சல் பரவிவருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக அவர்களுக்கு இதுபோன்ற காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என நினைத்து சுகாதாரத்துறையினர், காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களுக்கு மாத்திரைகள் வழங்கிச் சென்றனர்.
கிராமத்தில் சுகாதார நிலையம் இல்லாததால், அவர்கள் மன்னவனூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்று சிகிச்சைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இல்லாததால் அவர்களால் ஆஸ்பத்திரிக்குச் செல்ல இயலவில்லை. இந்த நிலையில், கிராமத்தைச் சேர்ந்த பஞ்சரத்தினம், பட்டம்மாள், வீரம்மாள், நாட்ராயி உட்பட 4 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த மர்மக் காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தக் கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் முகாம்கள் அமைத்து மருத்துவக் குழுவினர் சோதனை நடத்திவருகின்றனர்.
பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் கவனத்திற்கு மர்ம காய்ச்சல் பரவுவது குறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை செய்ய ஆர் டி ஓ விடம் தகவல் தெரிவித்ததாக தெரியவருகிறது.
இதனால் கொடைக்கானல் ஆர்டிஓ மலை கிராமத்தில் நேரடியாக சென்று மர்ம காய்ச்சல் பரவி வருவது குறித்து விசாரணை மேற்கொண்டார். இந்த காய்ச்சல் எதனால் பரவுகிறது என்பதை கண்டறிய சுகாதார துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொள்ள அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
கொடைக்கானல் மலை கிராமங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், அருகில் மருத்துவமனை இல்லாததாலும், முழு ஊரடங்கில் பஸ் போக்குவரத்து வசதி முடங்கி போய் உள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்க்கு ஆளாகியுள்ளனர். இங்கு நீடித்து வரும் மர்ம காய்ச்சலுக்கு முடிவு கட்ட தமிழக அரசு உடனடியாக சுகாதார துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து, கிராமங்கள் தோறும் முகாம் அமைத்து அரசு கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள்.


