சென்னை ஓட்டேரியில் வீட்டில் பதுக்கி மதுபானம் விற்றவரை மடக்கி பிடித்த போலீசார், அவரது வீட்டில் இருந்த மதுபானங்களை பறிமுதல் செய்ய சென்றபோது பெண்கள் சுற்றி வளைத்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஓட்டேரி போலீஸ் பெண் சப்-இன்ஸ்பெக்டர் சஜீபா தலைமையிலான போலீசார், ஓட்டேரி பாலம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு பதற்றத்துடன் ஓடிவந்த சரவண பெருமாள் என்பவர், தன்னிடம் 500 ரூபாய் வாங்கிக்கொண்டு மதுபாட்டில் தருவதாக கூறிய மர்மநபர், மதுபாட்டில் தராமல் ஏமாற்றி என்னை அடித்து உதைத்து அனுப்பி விட்டதாக கூறினார். இதையடுத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பவரை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்த போலீசார், சரவண பெருமாளிடம் மீண்டும் அதே நபரிடம் கூடுதல் பணம் கொடுத்து மதுபானம் வாங்கும்படி கூறி அனுப்பினர். அவரை போலீசார் பின்தொடர்ந்து சென்றனர்.
அப்போது ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தில் சரவண பெருமாளிடம் மதுபானம் விற்க முயன்ற சேகர் என்பவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர், அதே பகுதியில் உள்ள தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பது தெரிந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சஜீபா மற்றும் போலீஸ்காரர்கள் என 3 பேரும் சேகர் வீட்டில் பதுக்கிய மதுபாட்டில்களை பறிமுதல் செய்ய சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் இதுபோல் சட்டவிரோதமாக மதுபானம் விற்கும் கும்பலைச் சேர்ந்த பெண்கள், போலீசாரின் வாகனங்களை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் ஜீப்பில் அங்கு விரைந்து வந்தனர்.
இதற்கிடையில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் சஜீபா, அங்கிருந்து தனது வாகனத்தில் புறப்பட்டு செல்ல முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட சிலர் சப்-இன்ஸ்பெக்டர் சஜீபாவை கையால் தாக்கியதுடன், அவரை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தி்ல் ஈடுட்டனர்.அப்போது அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சஜீபாவை மீட்க முயன்றார். இதில் அவரையும் தாக்கினர். பின்னர் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற சேகரை காவல் நிலையம் அழைத்துச்செல்ல முயன்றனர்.
அதற்கும் எதிர்ப்பு தெரிவித்த பெண்கள், போலீசாரின் வாகனங்களை மறித்ததுடன், போலீசாரின் லத்தியையும் பறித்துக்கொண்டு கடும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் சஜீபா, மணிவண்ணன் மற்றும் ஒரு போலீஸ்காரர் என 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆனால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.
இதற்கிடையில் போலீசாரின் தீவிர தேடுதலுக்கு பிறகு அதே பகுதியில் பதுங்கி இருந்த கற்பகம் (37), காஞ்சனா (31), செல்வி (56), நந்தினி (25), வசந்தி (45), ரோஸ்லின் (21), ஆஷா (20), வினோத் (19), சசகிலா(35) உள்பட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான சசகிலா(35) மற்றும் வினோத் (19) இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை செயலக காலனி போலீசாரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 3 பேரிடமும் போலீஸ் உயர் அதிகாரிகள் நலம் விசாரித்தனர்

