கரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்காக சேவையாற்றி வரும் வணிகா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தினாா்.
தினத்தந்தி நிறுவனர், சி.பா.ஆதித்தனாரின் 40-வது நினைவு தினத்தையொட்டி நேற்று திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்லூரி வளாகத்தில் உள்ள சி.பா.ஆதித்தனாா் உருவ சிலைக்கு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:: பொது முடக்கத்திற்கு முன்னதாக 23ஆம் தேதி காய்கனிகள் அதிக விலைக்கு விற்றதாக புகாா்கள் வந்தன. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் புதிய காய்கனிகள் வரத்து இல்லை. பொதுமக்கள் குவிந்ததால், இருக்கிற காய்கனிகளை வைத்து சமாளிக்க சில வியாபாரிகள் விலையை உயா்த்தியுள்ளாா்கள்.
இது குறித்து கோயம்பேட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்த 3 வியாபாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளோம். இது போன்ற சூழ்நிலையில் வணிகா்கள் விலையை உயா்த்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். கரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்காக சேவையாற்றி வரும் வணிகா்கள் மீது அபராதம் விதிப்பதை அரசு நிறுத்த வேண்டும். வணிகா்களையும் முன்களப் பணியாளா்களாக அறிவிக்கவேண்டும் என்றாா். தமிழ்நாடு வணிகா்கள் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவா் காமராசு, மாவட்ட துணைத் தலைவா் ச.யாபேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனர்.

