தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜூலை மாதம் வரை ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழுவை தமிழக அரசு அமைத்தது. கண்காணிப்பு குழுவினர் கடந்த 5-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து ஆலைக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.
2018-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக தொடர்ந்து ஆலையை மூடப்பட்டு உள்ளதால் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை முழுமையாக சீரமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக வேகமாக நடைபெற்று வந்தது ஸ்டெர்லைட் நிறுவன ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்கி பரிசோதனை செய்து வந்தனர்
இதன் முடிவுகள் வெற்றிக்கரமாக இருப்பதாகவும், பரிசோதனை பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது ஆக்சிஜன் உற்பத்தி பகுதியில் 315 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வேறு உற்பத்தி பகுதிகளுக்கு செல்லாமல் தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆலை வளாகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் கண்காணிப்பு குழு உறுப்பினர்களான மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சப்-கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் சத்யராஜ், அனல்மின் நிலைய முதன்மை துணை வேதியியலாளர் ஜோசப் பெல்லார்மின் அன்டன் சோரிஸ், சுற்றுச்சூழல் நிபுணர்கள் அமர்நாத், கனகவேல் ஆகியோர் அடங்கிய கண்காணிப்பு குழுவினர் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது ஆக்சிஜன் தயாரிப்பு நிலைய பகுதியையும் அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு பணியாளர்கள் யாரும் செல்லாத வகையில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்புகளையும் பார்வையிட்டனர். உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் வந்து செல்லும் பாதை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகள் வேகம் எடுத்துள்ள நிலையில் இன்று முதல் ஆக்சிசன் உற்பத்தி ஸ்டெர்லைட் ஆலையில் துவங்கியது முதல் நாள் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிசன் 4.82 மெட்ரிக் டன் திருநெல்வேலி மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது இதனை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார. கொரோனோ பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு நாள்தோறும் ஆக்சிசன் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது ஆக்சிசன் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடி வந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிசன் உற்பத்தி பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
