ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் கட்டாயம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டிருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சர் மற்றும் ஜித்தாவிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மின் அஞ்சலின்படி,”சவுதி அரேபியாவுக்கு வருகைதரும் புனிதப் பயணிகள் அனைவரும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட வேண்டும் என்று இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
இந்தியப் பயணிகள் புனிதப் பயணம் மேற்கொள்ள நேரிட்டால், ஜூன் மாத மத்தியிலிருந்து புறப்பாடு விமானங்கள் இயங்கும். எனவே, பயணத்தில் இடையூறு ஏற்படாத வகையில் பயணிகள் முன்கூட்டியே தடுப்பூசி செலுத்திக்கொண்டு தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஹஜ்-2021க்கு விண்ணப்பித்தவர்கள் தற்போதே தடுப்பூசியின் முதல் டோஸைப் போட்டுக் கொண்டால்தான், புனிதப் பயணம் புறப்படும் நேரத்தில் இரண்டாவது டோஸைப் போட்டுக் கொள்ள முடியும். அதனால், பயணம் மேற்கொள்ளும் மக்கள் தற்போதே தடுப்பூசிப் போட்டுக் கொள்ள வேண்டும். ஹஜ்-2021 பயணம் தொடர்பான அதிகாரபூர்வ தகவல் எதுவும் சவுதி அரேபியாவிடமிருந்து பெறப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

