பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கைது – ஆயுதங்கள் மற்றும் வேன் பறிமுதல் – கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, ரவுடித்தனம், கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பல்வேறு தனிப்படைகள் அமைத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதன்படி இந்த ஆண்டு கடந்த 4 மாதங்களில் மட்டும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் இதுவரை 65 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் தலைமையில் தலைமைக் காவலர்கள் திரு. பென்சிங், திரு. மாணிக்கம், திரு. சாமுவேல், முதல் நிலைக் காவலர்கள் திரு.செந்தில், திரு. முத்துப்பாண்டி, திரு. மகாலிங்கம் மற்றும் திரு. திருமணி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் பின்புறம் ஒரு வேனை (Tata Venture Van) சோதனை செய்தபோது அந்த வேனில் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை விசாரணை மேற்கொண்டதில் அவர்கள், தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் (1) லெட்சுமணன் (29), கோரம்பள்ளத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் (2) ஜெயக்குமார் (39), தாளமுத்துநகரைச் சேர்ந்தவர்களான சங்கிலி கருப்பன் மகன் (3) விக்னேஷ் என்ற விக்கி (20), மாரிக்குமார் மகன் (4) கண்ணன் (23), தூத்துக்குடி கே.வி.கே நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் (5) மாரிபிரபாகரன் (20) மற்றும் தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த நயினார்தாஸ் மகன் (6) சின்னத்துரை (40) என்பதும், அவர்கள் 2 அரிவாள், 2 கத்தி, கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடயிருந்தது தெரியவந்தது. உடனே தனிப்படையில் மேற்படி எதிரிகளை கைது செய்து, அவர்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வார் திரு. ஆர்தர் ஜெஸ்டின் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து வடபாகம் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கைது செய்யப்பட்ட எதிரிகளில் லெட்சுமணன் மீது கொலை, கொலை முயற்சி, கொள் வழக்குகள் உட்பட 12 வழக்குகளும், ஜெயக்குமார் மீது 3 வழக்குகளும், விக்னேஷ் என்ற விக்கி மீது ஒரு வழக்கும், கண்ணன் மீது கொலை முயற்சி, திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் உட்பட 16 வழக்குகளும், மாரிபிரபாகரன் மீது 2 வழக்குளும், சின்னத்துரை மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட 4 வழக்குள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி எதிரிகளை கைது செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

