தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எவ்வித இடையூறுமின்றி நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என டீன் ரேவதி பாலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மொத்த படுக்கை வசதி 1212 உள்ளது. இதில் 700 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கு என்று வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 550 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளது. மீதமுள்ள 150 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் லைன் கொடுக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. ஆக்சிஜன் டேங்கைப் பொறுத்தவரையில் I0KLD மற்றும் 6KLD என இரண்டு ஆக்சிஜன் டேங்க் வீதம் மொத்தம் 16 KLD கொள்திறனுடன் உள்ளது.
“B” Type சிலிண்டர்- 200 “D” Type சிலிண்டர் -100 இருப்பில் உள்ளது. Remdesivir போன்ற சிகிச்சைக்கான மருந்துகள் போதிய அளவில் உள்ளன. கொரொனா அறிகுறிகளோடு அல்லது கொரொரனா பாதித்த நிலையில் வரக்கூடிய கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான அறுவை சிகிச்சையும் , கொரொனா பாதிப்புடைய விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உயிர் காக்கும் அவசர அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு தேவையான அறுவை சிகிச்சை செய்ய தனியாக இயங்கும் சிறப்பு அறுவை சிகிச்சை அரங்கம் செயல்பட்டு வருகிறது
கரோனா வார்டில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் இதர சுகாதாரப் பணியாளர்கள் போன்றோர் பணிசெய்ய போதுமான அளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கரோனா பரிசோதனை செய்வதற்கு 2 Swab Booth மூலம் தினசரி சராசரியாக 200க்கு மேல் சளி மாதிரிகள் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியிலுள்ள நுண்ணுயிரியல் துறை மூலம் RTPCR கரோனா பரிசோதனை தினசரி 3500 வீதம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
கரோனா வகைப்படுத்துதல் மையம் ( Covid Sereening Centre) தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்பட்டு தினசரி 200 வெளி நோயாளிகள் வருகை புரிந்து பயன்பெற்று வருகிறார்கள். கரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. கோவேக்சின் மற்றும் கோவிஷில்டு என்னும் இரு வகையான தடுப்பூசி போடப்படுகிறது இதுவரை முதல் மற்றும் இரண்டு Dose வீதம் மொத்தம்-13,333 Dose தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்பொழுது தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொது பிரிவு வார்டில் 423 நோயாளிகளும் கரோனா வார்டில் 311 நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் குழந்தைகள் நலம். மூடநீக்கியல் மூளைநரம்பியல், பொது அறுவை சிகிச்சை, புற்று நோய் கதிர்வீச்சு, காது மூக்கு தொண்டை, சுவாச நோய் மருத்துவம் போன்ற இதரத் துறைகளும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எவ்வித இடையூறுமின்றி நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என டீன் ரேவதி பாலன் தெரிவித்துள்ளார்.

