குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 6,13,220/- பணத்தை கொள்ளையடித்த எதிரிகள் 2 பேர் கைது – 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஓரு காரும் பறிமுதல் – எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அண்ணாநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் முருகன் (51). இவர் குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12.04.2021 அன்று மது விற்ற ரூபாய் 6,13,220/- பணத்தை கீழ வைப்பாற்றில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக முருகன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் முருகனை பின் தொடர்ந்து இருச்சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்மநபர்கள் முருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. கங்கைநாதபாண்டியன், தலைமை காவலர் திரு. வடிவேல், முதல் நிலை காவலர்கள் திரு. செல்வகுமார் திரு. முத்துசேகர் மற்றும் திரு. ராசைய்யா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து கொள்ளையடித்து சென்றவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.
மேற்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்டையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதிலும், அறிவியல்பூர்வமாக சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததின் மூலமும் மதுரை, முடக்கு சாலை இந்திரா ராணி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த துரைக்கண்ணன் மகன் பாரத் (22), மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் முத்துஇருள் (29) மற்றும் தூத்துக்குடி மில்லர்புரம் வள்ளலார் கோவில் தெருவைச் சேர்ந்த குமார் மகன் மணிகண்டன் என்ற சுருட்டைமணி (23) ஆகியோர் டாஸ்மாக் ஊழியரான முருகனிடம் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் எதிரிகளில் ஒருவரான முத்துஇருள் மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலைய கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்படி எதிரிகளான பாரத் மற்றும் மணிகண்டன் என்ற சுருட்டைமணி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களும், ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் விவேகமாகவும், விரைந்தும் செயல்பட்டு, எதிரிகளை கண்டு பிடித்து 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.


