தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் கவர்னகிரியில் உள்ள வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் நாளை நடைபெற உள்ள பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபிநபு மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பரவல் சென்ற ஆண்டை விட தற்போது வேகமாக பரவி வருவதால் 144 குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படியான தடை உத்தரவு அமலில் உள்ளது. ஆகவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவை முன்னிட்டு 2 கூடுதல் எஸ்.பிக்கள் 8 டி.எஸ்.பிக்கள் 38 காவல் ஆய்வாளர்கள், 78 உதவி ஆய்வாளர்கள் உட்பட 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு கோபி, காவல்துறை தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் துணை போலீஸ் சூப்பிரண்டு தூத்துக்குடி கணேஷ், விளாத்திக்குளம் பிரகாஷ், ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், சாத்தான்குளம் காட்வின் ஜெகதீஸ்குமார், கோவில்பட்டி பொறுப்பு பழனிக்குமார், மணியாச்சி சங்கர், தூத்துக்குடி ஊரகம் பொறுப்பு முருகவேல், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பேச்சிமுத்து, காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ஏழுமலை, ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் முத்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ், கோவில்பட்டி தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஸ்டீபன் உள்ளிட்ட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.



