தூத்துக்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் டாஸ்மாக் ஊழியரை வழிமறித்து ரூ.6.15 லட்சத்தை வழிப்பறி செய்த 3 பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருபவர் முருகன்(51). இவர் நேற்று மாலையில் கடையில் மதுபான விற்பனையில் வசூலான ரூ.6.15 லட்சத்தை ஒரு பேக்கில் வைத்துக் கொண்டு பைக்கில் கீழ வைப்பாறிலுள்ள ஐ.ஓ.பி. வங்கிக்கு சென்று கொண்டிருந்தார்.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு பைக்கில் 3 மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்தனர். அடைக்கலம் கண்மாய் அருகில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று முந்திச்சென்ற அவர்கள், பைக்கை சாலையின் குறுக்கே நிறுத்தி, வழிமறித்தனர். பின்னர் 3 மர்ம நபர்களும் முருகனை சரமாரியாக அடித்து உதைத்து அவர் பேக்கில் வைத்திருந்த ரூ.6.15 லட்சத்தை பறித்துச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேர் கொண்ட வழிப்பறி கும்பலை தேடிவருகின்றனர்.

