இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சியில் ஊட்டச்சத்து மிகுந்த காய்கனிகள் பயிரிடப்பட்டு அதனை கர்ப்பிணி பெண்களுக்கு மாவட்ட ஊராட்சித்தலைவர் இலக்கியராமு வழங்கினார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஊட்டச்சத்து மாத விழாவை கடைபிடிக்கும் வகையில், இந்த மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் உள்ள இடங்களில் காய்கனித் தோட்டம் அமைக்க ஊராட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுகள் எதுவாயினும் முதன் முதலாக அமல்படுத்தும் பஞ்சாயத்து தலைவராக திருவாடானை பஞ்சாயத்து தலைவர் இலக்கிய ராமு செயல்பட்டு வருகிறார்.
அரசின் உத்தரவை உடனே அமுல்படுத்தும் நோக்கத்தோடு, திருவாடானை ஊராட்சி சார்பில், சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, மண்ணை மேம்படுத்தி அங்கு மிகப்பெரிய தோட்டம் அமைக்கப்பட்டது. இதில் பல்வேறு ஊட்டச்சத்து மிகுந்த கத்தரி, தக்காளி, முள்ளங்கி, வெண்டைக்காய், கீரை, உள்ளிட்ட ஏராளமான காய்கனிகள் பயிரிடப்பட்டு, முறையாக பராமரிக்கப்பட்டு வளர்த்தனர். தற்போது, காய்கனிகள் அனைத்தும் நல்ல விளைச்சல் ஏற்பட்டதால், திருவாடனை ஊராட்சி மன்ற தலைவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி, திருவாடானை ஊராட்சி சார்பில், சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விளைந்த ஊட்டச்சத்து மிகுந்த காய்கனிகளை இன்று (07.04.2021) திருவாடானை ஊராட்சியில் வசிக்கும் கர்ப்பிணி பெண் கமலி நாகேந்திரன் அவர்களுக்கு பஞ்சாயத்து தலைவர் இலக்கிய ராமு வழங்கினார்.
முற்றிலும் இயற்கையாக ஊட்டச்சத்து மிகுந்த காய்கனிகளை மேலும் பெருக்கி, கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்படும் வகையில் உதவிட முன்வந்துள்ளார். மேலும் இந்த தோட்டத்தில் மண்ணை மேம்படுத்தி, முறையாக பராமரித்து காய்கனி உற்பத்தியை தொடர்ந்து நடைபெற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
திருவாடானை ஊராட்சி தலைவர் இலக்கிய ராமு அவர்களின் சிறந்த பணியினை இராமநாதபுரம் மாவட்டம் நிர்வாகம் மற்றும் ஊராட்சி இயக்குநர் ஆகியோர் பாராட்டினார்கள். பஞ்சாயத்து தலைவர் இலக்கிய ராமுவின் செயல்பாடு அப்பகுதியை சார்ந்த பெண்கள்;, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
செய்தி: அபுபக்கர் சித்திக்




