விளாத்திகுளம் அருகே தேர்தல் தகராறு 2 வேன்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர், ஜெகவீர பாண்டிய புரத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் (40). அதிமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். மேலும் சொந்தமாக வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயபாரதி (35), வீட்டிலிருந்தபோது, அதே கிராமத்தில் வசிக்கும் திமுக பிரமுகரான செல்லப்பாண்டி மகன் முருகன் (49), என்பவர் காளிதாஸ் வீட்டிற்கு சென்று ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்றாராம்.
இதனை ஜெயபாரதி கண்டித்து அனுப்பினாராம். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காளிதாஸ், முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து அப்பகுதியில் நிறுத்தியிருந்த காளிதாசின் வேனிற்கு தீ வைத்துள்ளனர். இதில் அவரது வேன் மற்றும் அதன் அருகே நிறுத்தியிருந்த மற்றொரு வேனும், தீப்பற்றி எரிந்தது. மேலும் தீயை அணைக்க முயன்ற காளிதாஸ்க்கு தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முருகன் உட்பட 7 பேர் மீது விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் அழகு பாண்டி (47) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவ இடத்தை விளாத்திகுளம் டிஎஸ்பி பாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டார். தேர்தல் தகராறில் வேன்கள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

