தூத்துக்குடி ஏப்ரல்
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகிய மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஸ்டேட் பேங்க் காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கௌதம் பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.
இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தீனதயாளன், தூத்துக்குடி புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு அமைப்பாளர் முனீஸ்வரன் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தவெக-விலிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
புதிதாக இணைந்தவர்களைச் சால்வை அணிவித்து வரவேற்று சி.த.செல்லப்பாண்டியன் பேசியதாவது: “திரைப்படங்களில் முதலமைச்சராக நடிக்கலாம், அதற்கான கனவுகளையும் காணலாம். ஆனால், நிஜ அரசியலில் தமிழக முதல்வர் என்ற கனவு எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் பொருந்தாது. தடம் மாறிச் சென்ற நீங்கள் தற்போது சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைய அனைவரும் முழுமையாக உழைக்க வேண்டும். உழைப்பிற்கேற்ற பலன் வரும் காலங்களில் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்”என்றார்.
இந்நிகழ்ச்சியில் பகுதிச் செயலாளர் சந்தனபட்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் துணைச் செயலாளர் ஜோதிமணி, இலக்கிய அணி இணைச் செயலாளர் பொற்கிழி ஜான்சன் தேவராஜ், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜகோபால், பாஜக ஓபிசி அணி துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், மண்டலச் செயலாளர் ஜெயரூபி, முன்னாள் வட்டச் செயலாளர் திருமணி உட்பட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

