தூத்துக்குடி.
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் உள்ள பிரஸ்கிளப் நிர்வாகிகளும் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர் சங்கத்தின் பிரநிதிகள் முதலமைச்சரை சந்தித்தனர். அப்போது அவர்கள் பெற்றுவரும் ஓய்வூதியத்தில் உயர்வு, மருத்துவக் காப்பீடு மற்றும் வீட்டுவசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சரிடம் முன்வைத்தனர்.
பத்திரிகையாளர்களின் கோரிக்கையினை ஏற்கும் வகையில் பத்திரிகையாளர்கள் தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் மாதம் 12,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் 6,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்.
அதேபோல, அங்கீகார அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சென்னை பத்திரிகையாளர்கள் குடியிருக்க வீடு அல்லது வீடுகட்ட நிலம் ஒதுக்கித் தரவேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டுமனைகள் வழங்க ஏற்பாடு செய்யவும், இதற்கு பத்திரிகையாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் துவக்கி நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
பத்திரிகையாளர்கள் சங்கத்தினரின் ஏனைய கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும். என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் மானிய விலை வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோரிக்கை மனுக்கள் வழங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செய்தியாளர் ஜெகஜீவன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மாநகராட்சி மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பெருமாள் கோவில் அறங்காவலர்குழுத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், அமைச்சரின் நேர்முக உதவியாளர்கள் கல்யாண சுந்தரம், மணி ஆகியோர் உடனிருந்தனர்.
