தூத்துக்குடி, மார்ச், 7
தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி மற்றும் காலபைரவர் சித்தர் பீடத்தில், மங்களம் தரும் 9 அடி உயர சனீஸ்வரர் சன்னதியில் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பு யாக வழிபாடுகள் மற்றும் பரிகார பூஜைகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழா “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது. சனிப்பெயர்ச்சி விழா முன்னிட்டு 5ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.10 மணிக்கு மஹா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு சங்கல்ப பூஜை நடைபெற்றது. இரவு 7.00 மணிக்கு சனீஸ்வரருக்கு யாகத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
6ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு மங்களம் தரும் சனீஸ்வரருக்கு மஹா யாகத்துடன் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. காலை 6.00 மணிக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், திருநீறு, பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர் உள்ளிட்ட 64 வகையான அபிஷேகங்கள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றன.
தொடர்ந்து காலை 7.37 மணிக்கு சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடையும் நேரத்தில், சனீஸ்வரருக்கான சிறப்பு பூஜைகள் மற்றும் பரிகார வழிபாடுகள் நடைபெற்றன.
சனிப்பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்படும் மீனம், மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் சனீஸ்வரரை பரிகாரம் செய்து வழிபாடு செய்தனர். அதேபோல் ரிஷபம், துலாம், மகரம் உள்ளிட்ட பிற ராசிக்காரர்களும் சனீஸ்வரரை வழிபட்டனர்.
பின்னர் சனீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மஹா தீபாராதனை நடைபெற்றது. சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு மஹா அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பரிகாரம் செய்ய விரும்பிய ராசிக்காரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றனர்.
சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சனீஸ்வரரை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் செய்திருந்தார்.
