திருநெல்வேலி,
ஜன, 30
2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி-க்கு, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொதுமக்களின் முக்கிய தேவையாக கருதப்படும் பல்வேறு கோரிக்கைகளை ஓட்டப்பிடாரம் தொகுதியின் வளர்ச்சியாக கருத்தில் கொண்டு
13 முக்கிய கோரிக்கையை
ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், இப்பகுதி மக்களின் கல்வி, விவசாயம், மீன்வளம், விளையாட்டு, தொழில் மற்றும் சுற்றுலா வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு 13 முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
அதில், ஓட்டப்பிடாரம் பகுதியில் அனைத்து விளையாட்டு வீரர்களும் பயனடையும் வகையில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நினைவாக உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்றும், தருவைக்குளம் பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடற்கரை வளைவு பாலம் மற்றும் மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும், புதுக்கோட்டை (தட்டப்பாறை விலக்கு) அருகே கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை ஆராய்ச்சி மருத்துவக் கல்லூரி, தெய்வச்செயல்புரத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி– திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வாகைகுளம் மேற்கு பகுதியில் ஏற்றுமதி–
இறக்குமதி வணிக வளாகங்கள் அமைக்க வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குலையன்கரிசல், முள்ளக்காடு பகுதிகளில் வாழை விவசாயிகளுக்கான மதிப்புக்கூட்டு பதப்படுத்தும் குடோன்கள், புளியம்பட்டியில் கலைஞர் தினசரி உழவர் சந்தை, வல்லநாடு வனப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சிக்காக வனவிலங்கு பார்வை மையம் அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உழக்குடி மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், செக்காரக்குடி சுற்றுவட்டார மானாவாரி விவசாயிகளுக்காக மதிப்புக்கூட்டு தொழிற்சாலைகள் மற்றும் குளிர்சாதன குடோன்கள் அமைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், கோரம்பள்ளம் அந்தோணியார்புரம் அருகே பெண்களுக்கான சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்றும், தாமிரபரணி நதிநீர் மூலம் கலியாவூர் முதல் செக்காரக்குடி வரை பாசன கால்வாய் அமைத்து விவசாய உற்பத்தியை உயர்த்த வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வல்லநாடு, கொங்கராயக்குறிச்சி உள்ளிட்ட தாமிரபரணி நதிநீர் வளைவு பகுதிகளில் கரைகளை உயர்த்தி, கால்வாய்களை தூர்வாரி மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களின் கோரிக்கையாக மேற்கண்ட கோரிக்கை மனுவை ஓட்டப்பிடாரம் வடக்கு திமுக ஒன்றிய திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட மனுவை பெற்றுக் கொண்ட எம்பி கனிமொழி
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக, மண்டலங்கள் தோறும் சென்று அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து, கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறோம். இதன்மூலம், திமுக தேர்தல் அறிக்கையை மக்களின் தேர்தல் அறிக்கையாக உருவாக்கும் வேலைகளைச் செய்து வருகிறோம். அதன்படி தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக தெரிவித்துள்ள மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து திமுக தலைவரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுடைய ஒப்புதலோடு ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களுக்கு நற்செய்தியாக மக்களின் தேர்தல் அறிக்கையாக விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்தார். இதனால் ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் இளையராஜா மற்றும் நிர்வாகிகள் கனிமொழி எம்பிக்கு நன்றி தெரிவித்தனர்.

