தூத்துக்குடி
ஆண்டு தோறும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பணியில் செயல்படும் தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், தனி நபர்களை கலெக்டர் தலைமையிலான குழுவானது தேர்ந்தெடுத்து, தமிழக அரசுக்கு பரிந்துரைக்கும். சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பித்து அதில் தேர்வானவர்களை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களுக்கு “கிரீன் சாம்பியன் விருதும்” சான்றிதழும், ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும்.
இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவருமான தாமோதரனுக்கு 2023 – 2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கிரீன் சாம்பியன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு வலு சேர்க்கும் விதமாக தூத்துக்குடி மட்டுமல்லாது தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பசுமை குறுங்காடுகளையும், பசுமை குறும்பூங்காவனங்களையும் உருவாக்கி நாட்டின் பசுமை போர்வையை மேம்படுத்த சிறப்பாக சேவையாற்றியுள்ளார். கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரைகளில் 16 லட்சத்துக்கும் மேலான பனைவிதைகளை நடவு செய்து, தமிழகத்தின் தேசிய மரமான பனைமரங்களை மீட்டெடுக்கும் விதமாகவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்து தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி அமைச்சர்கள், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் மூலமாக பசுமை பாதுகாவலன், பசுமை தோழன், பசுமை நாயகன், பசுமை செந்துளிர் என பல விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் பெற்றுள்ளார்.
தற்போது தமிழக அரசின் சுற்றுச் சூழலுக்கான உயரிய விருதான “கிரீன் சாம்பியன் விருது” பெற்றுள்ள தாமோதரன் தன்னுடைய வழிகாட்டியாக விளங்கும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவரும், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான காசிவிஸ்வநாதனிடம் வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும் பெற்றார்.
முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதியே நேரடியாக வந்து இந்த விருதினை வழங்கியது போன்று இருக்கிறது. கலைஞர் நூற்றாண்டையும் கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இது கலைஞரால் கிடைக்கப்பெற்ற விருது என்று பெருமிதம் அடைந்து யூனியன் துணைச்சேர்மன் காசிவிஸ்வநாதனுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். உடன் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், பசுவந்தனை காவல் நிலையக்காவலர் மகாராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

